கச்சத்தீவு தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு தெளிவானது என்றும், அந்தத் தீவை இந்தியாவுக்கு ஒப்படைக்கப் போவதில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சமீபத்தில், தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் சூழலில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கச்சத்தீவை குறித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், “கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வு அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பின்னணியில், அமைச்சர் விஜித ஹேரத், தற்போது இந்தியாவின் உள்நாட்டு அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, அரசியல் தேவைகளுக்காகவே இத்தகைய கருத்துக்கள் வலுப்படுத்தப்படுகின்றன என்றும், இலங்கை அரசாங்கம் அவற்றை அரசியல் உரைகளாகவே காண்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
கச்சத்தீவு தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு மாற்றமின்றி இருப்பதாகவும், அந்தத் தீவு ஒருபோதும் இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

