லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2025ஆம் ஆண்டில் மொத்தம் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தீவெங்கும் நடத்தப்பட்ட 130 திடீர் சோதனைகளின் போது இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியது.
இதில் அதிகபட்சமாக 30 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பொலிஸ் சார்ஜென்ட்கள், 9 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், 4 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 2 பிரதான பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.
மேலும், நீதித்துறை அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிந்த 11 பேர், வேளாண்மை மற்றும் பொது சேவை துறைகளில் 5 அதிகாரிகள், 3 கிராம சேவையாளர்கள் மற்றும் 3 பிரதேச சபை அதிகாரிகளும் லஞ்ச குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், திடீர் சோதனைகளில் கைது செய்யப்பட்டவர்களைத் தவிர்த்து, விசாரணைகளின் பின்னர் மேலும் 56 பேர் 2025ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது. இவர்களில் முன்னாள் அமைச்சர்கள், அமைச்சு செயலர்கள், திணைக்கள தலைவர்கள், மருத்துவர்கள், முன்னாள் பிரதேச சபைத் தலைவர்கள் மற்றும் பல அரசு அதிகாரிகள் அடங்குவதாக கூறப்பட்டது.
2025ஆம் ஆண்டில், 153 பேருக்கு எதிராக 115 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 69 வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல், 2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஆணைக்குழுவிற்கு 8,409 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 569 முறைப்பாடுகளுக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

