தீவிரமடையும் போர் பதற்றம் – இலங்கையில் 205 உள்நாட்டு விமானங்கள் அதிரடியாக இரத்து

0
38
Article Top Ad

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இதுவரை மொத்தம் 205 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையால் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை குறித்து இன்று (03) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்தாலோசனையின் பின்னரே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

நாட்டுக்கு வரவிருந்த 107 விமானங்களும், புறப்படவிருந்த 98 விமானங்களும் என மொத்தம் 205 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்த விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதையடுத்து, இந்நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு விசா நீட்டிப்பை வழங்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் சில விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், அதற்கமைய அவ்விமானப் பயணங்களை மீளமைப்பதற்கு முழுமையான விமான டிக்கெட்டுகளையும் இரத்து செய்ய வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார்.

கூடுதல் கட்டணம் ஏதுமின்றி ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்ப வழங்கவும், அதனை வேறு விமானப் பயணத்திற்கு மாற்றுவதற்கும் அனைத்து விமான நிறுவனங்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், ஐரோப்பாவிற்கான விமான சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தை தவிர்த்து மாற்று வழிகள் ஊடாக இந்த விமான சேவைகள் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கு அதிக எரிபொருள் செலவாகும் என்பதனால் நிலைமை சீரடையும் வரை விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் பொதிகளை மட்டுப்படுத்த வேண்டி வரும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.