கிரிக்கெட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக், கிரிக்கெட் உலகில் அதிகரித்து வரும் இந்திய அரசியல் செல்வாக்கை விமர்சித்துள்ளதுடன், விளையாட்டின் நிர்வாகத்தில் அதிகரித்து வரும் சீரழிவு குறித்தும் எச்சரித்துள்ளது.
விஸ்டன் இதழின் 2026 பதிப்பில், உலக கிரிக்கெட் நிர்வாகத்தில் இந்தியா ஆரோக்கியமற்ற ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்ட, 1864ஆம் ஆண்டு முதல் வெளிவந்துகொண்டிருக்கும் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக், உலகெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய கிரிக்கெட் போட்டிகளின் வருடாந்திரப் பதிவாகும்.
மேலும் கிரிக்கெட் விளையாட்டின் “பைபிள்” என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், அதன் 163வது ஆண்டுப் பதிப்பில், உலகளாவிய கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆரோக்கியமற்ற மற்றும் அரசியல்மயமாக்கப்பட்ட ஆதிக்கத்தை இதழின் ஆசிரியர் லோரன்ஸ் பூத் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தலைவராகப் பணியாற்றும் ஜெய் ஷா உள்ளிட்ட, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முக்கிய தலைமைப் பதவிகளில் இந்திய அதிகாரிகள் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜெய் ஷா, இந்தியாவின் உள்துறை அமைச்சரும் பிரதமர் நரேந்திர மோடியின் நீண்டகால கூட்டாளியுமான அமித் ஷாவின் மகன் ஆவார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு ஷா தலைமை தாங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை “இந்தியாவின் ஆளும் பாஜகவின் விளையாட்டுத் துணை அமைப்பு” என்று விஸ்டன் விவரித்துள்ளது.
விஸ்டன் இதழில் வெளியான கட்டுரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் விவரித்திருந்தது.
மேலும், கிரிக்கெட் நிர்வாகத்தில் அதிகரித்து வரும் அரசியல் தலையீடு குறித்த கவலைகளையும் லோரன்ஸ் பூத் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு குறுகிய காலப் போர் நடந்த பின்னணியில் நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண தொடரில் அரசியல் எவ்வாறு தலையிட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் விளைவாக இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டிகளில் அணியின் வீரர்கள் கைகுலுக்க மறுத்ததையும் பூத் சுட்டிக்காட்டினார்.
பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் வன்முறையின் போது இந்துக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.
இந்த இராஜதந்திரப் பதட்டங்களுக்கு மத்தியில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டது உள்ளிட்ட உதாரணங்களையும் அவர் அடிக்கோடிட்டுள்ளார்.
முஸ்தாபிசூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது, பங்களாதேஷ்அரசாங்கம் அவர்களை இந்தியாவிற்குப் பயணிக்க அனுமதிக்க மறுத்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து அந்நாடு நீக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டபோது, சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுத்ததுடன், தங்களது அனைத்து போட்டிகளையும் துபாய்க்கு மாற்ற கோரியிருந்தது.
இதற்கு அனுமதி வழங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் பேரவை, டி20 உலகக் கிண்ண தொடரின் தங்கள் விளையும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற பங்களாதேஷின் கோரிக்கையை நிராகரித்திருந்தது.
இந்த சமத்துவமற்ற நிலையையும் லோரன்ஸ் பூத் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், கிரிக்கெட்டின் அதிகரித்து வரும் அரசியல்மயமாக்கல், ஆட்டத்தின் நிர்வாகத்தைச் சீர்குலைத்து வருவதாக விஸ்டன் இதழ் எச்சரித்துள்ளது.
இந்தியாவின் செல்வாக்கு மற்றும் அரசியல் காரணிகளால் உலக கிரிக்கெட் களம் அதிகளவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது என்றும் விஸ்டன் இதழ் மேலும் தெரிவித்துள்ளது.

