உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனி (81), அந்நாட்டின் ஜனாதிபதியாக ஏழாவது முறையாக இன்று பதவியேற்று புதிய சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
பதவியேற்பு விழாவை முன்னிட்டு தலைநகர் கம்பாலாவில் கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகளுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பொது அமைதியைப் பேணும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதவியேற்பு விழாவில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய முசெவேனி,
தனது இந்தப் புதிய பதவிக்காலம் அனைத்து உகாண்டா மக்களுக்கும் சுறுசுறுப்பான காலமாக அமையும் எனக் கூறியதுடன், “மக்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், செல்வத்தைப் பெருக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் முசெவேனி 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி அவர் 2031-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருப்பார்.
இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகளை அவரது பிரதான எதிராளியான பாப் இசைக்கலைஞர் பாபி வைன் நிராகரித்துள்ளார்.
தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
44 வயதான எதிர்க்கட்சித் தலைவர் பாபி வைன் , தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் .
1986-ஆம் ஆண்டு ஒரு கிளர்ச்சிப் படைத் தலைவராக அதிகாரத்தைக் கைப்பற்றிய முசெவேனி, அதன்பின்னர் நடைபெற்ற ஏழு தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆப்பிரிக்காவின் நீண்டகால ஆட்சியாளர்களில் ஒருவராகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

