
2025 ஆம் ஆண்டில் பிரிட்டனின் நிகர குடியேற்ற எண்ணிக்கை 171,000 ஆக குறைந்துள்ளது. கொரோனா காலத்தை தவிர்த்து பார்க்கும்போது, இது 2012க்கு பிறகான மிகக் குறைந்த அளவாகும்.
இன்று வெளியிடப்பட்ட பிரிட்டன் குடியேற்ற தரவுகளில், தேசிய புள்ளிவிவர அலுவலகமும் (ONS), உள்துறை அமைச்சகமும் தனித்தனியான அறிக்கைகளை வெளியிட்டன.
அதன்படி, 2025 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஒரு ஆண்டில், பிரிட்டனின் நிகர குடியேற்ற எண்ணிக்கை 171,000 ஆக பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில், தங்களின் அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் வரை ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்த அகதிகளின் எண்ணிக்கை, 2026 மார்ச் வரையிலான 12 மாதங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறைந்துள்ளது.
ஆனால் இதனுடன் சேர்த்து, சிறிய படகுகள் மூலம் சட்டவிரோதமாக பிரிட்டனை அடைந்தவர்களின் எண்ணிக்கை 3% அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்த தரவுகளை பிரதமர் Keir Starmer தனது அரசின் “திறன் அடிப்படையிலான குடியேற்ற முறை” வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதற்கான சான்றாகக் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் Shabana Mahmood, “நாட்டின் எல்லைகளில் மீண்டும் ஒழுங்கும் கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நிழல் உள்துறை செயலாளர் Chris Philp, “லேபர் கட்சியின் அதிக வரி கொள்கையால் பிரிட்டிஷ் மக்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்” என்றும், “ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து வரும் குடியேற்றம் இன்னும் அதிகமாகவே உள்ளது” என்றும் குற்றம்சாட்டினார்.
சுயாதீன ஆய்வு மையமான Migration Observatory, இந்த நிகர குடியேற்ற வீழ்ச்சி “தற்காலிகமானதாக இருக்கலாம்” என்று எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், குடியேற்ற கட்டுப்பாடு தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற இன்னும் “செய்ய வேண்டியவை அதிகம் உள்ளன” என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

