
பிரித்தானியாவில் பராமரிப்பு (Care Worker) விசா திட்டம் தொடர்பான குடிவரவு விதிமுறைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளதால் பல இலங்கை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குடிவரவு – குடியகழ்வு சட்டம் தொடர்பில் கடந்த காலத்தில் எதிர்க்கட்சிகளால் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்ததால் பிரித்தானிய அரசாங்கம் பல்வேறு விசா விதிமுறைகளை கடுமையாக்கி வருகிறது.
இதன் கீழ், சில வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் குறித்து புதிய ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்நாட்டு உள்துறை அமைச்சின் இந்த நடவடிக்கைகளால், சில குடும்பங்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையர்கள் புலம்பெயர்ந்து வாழும் பிரதான நாடாக பிரித்தானியா இருப்பதால் இந்த புதிய கட்டுப்பாடுகள் அவர்களை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள், விசா விதிமுறைகளின் மீறல், வேலை அனுமதி நிபந்தனைகள் மற்றும் நீண்டகால குடியிருப்பு தகுதி போன்ற அம்சங்களை மீளாய்வு செய்வதன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களில் சில இலங்கை குடும்பங்கள் சட்டரீதியான ஆலோசனைகளை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், ஒவ்வொரு வழக்கும் தனித்தனியாக பரிசீலிக்கப்பட்டு சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படுவதாக பிரித்தானிய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

