போராட்டங்கள் நடத்துவதன் மூலம் தீர்வைப்பெற முடியாது அரசுடன் பேசினால்தான் நன்மை என்கிறார் நீதி அமைச்சர்

0
180
Article Top Ad

“போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுவிட முடியாது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிரச்சினைக்குத் தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் அதற்குரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும்.”

– இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தில் இன்று நீதி அமைச்சின் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தபின் ஊடகங்களுக்குக் கருத்துத்  தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீண்ட காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இன்று யாழ்ப்பாணத்திலும் எமது நிகழ்வு நடக்கும் இடத்திற்கு முன்பும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

நேற்று நான் முல்லைத்தீவில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோதும் நான் கலந்துகொண்ட நிகழ்வு முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அவர்களை நான் சந்திக்க அழைத்தேன். ஆனால், அவர்கள் சந்திக்க விரும்பவில்லை என்று கூறினார்கள்.

எனவே, அதிலிருந்து ஒன்றை நான் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அவர்கள் போராட்டம் செய்யவே வந்திருக்கின்றார்கள். அவர்களுக்குப் பிரச்சினைக்குரிய தீர்வு தேவையில்லை. அவர்களுக்குப் போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்காது.

கடந்த 13 வருடங்களாகப் போராட்டங்களை மேற்கொண்டு அவர்களுக்கு என்னதான் கிடைத்தது. போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் எதையும் அவர்கள் பெற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத் தருமாறு கூறினால் அதைப் பெற்றுக் கொடுக்க முடியாதுதானே? அதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இந்தக் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும். அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால், நான் ஒன்றைக் கூறிவைக்க விரும்புகின்றேன். நீதி அமைச்சர் என்ற ரீதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டுமானால் அது அரசுடன் பேசித்தான் அதற்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர போராட்டங்களை மேற்கொண்டு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது

போராட்டங்களை மேற்கொள்வது அவர்களுடைய ஜனநாயக உரிமை. அதனை மதிக்கின்றேன்.அதனைத் தடுக்கமாட்டேன். ஆனால், போராட்டங்களை நடத்தி எதனையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்” – என்றார்.