வலைகளை அறுத்து நாசமாக்கிய இந்திய மீனவர்களின் அடாவடிக்கு எதிராக வடமராட்சியில் போராட்டம்!

0
174
Article Top Ad

இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளன. குறித்த செயலைக்  கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமராட்சி, பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வலைகளே அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளன.

அதனைக் கண்டித்து மீனவர்கள் சுப்பர்மடம் பகுதியில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் படகுகளை, வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாகப் பாதிப்படைந்தன.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள்  அதிகரித்தே செல்கின்றன. மீனவர்களின் அத்துமீறல்களைக்  கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாகப் பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தோம். பல கட்டங்களாகப் போராட்டங்களை முன்னெடுத்தோம். இது எதற்குமே பயனில்லை.

மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. அவர்களைக் கட்டுப்படுத்தவோ – அவர்களைத் தடுத்து நிறுத்தவோ எவரும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

அத்துமீறி எமது எல்லைக்குள் நுழையும் மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை விரட்டியடிக்க எம்மால் முடியும். ஆனால், நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணத்திலையே நாம் பொறுமை காக்கின்றோம்.

அத்துமீறும் மீனவர்களை, அவர்களின் படகுகளுடன் சிறைப்பிடித்து எமது கரைக்குக் கொண்டு வரவும் எம்மால் முடியும்.

எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதேவேளை, எமது பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா கரிசனை கொள்ளாவிடின் நாம் சீனாவின் உதவியை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

கடற்றொழில் அமைச்சர் இது தொடர்பில், நடவடிக்கை எடுக்க முடியாவிடின் அவர் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதே சிறந்தது” – என்றனர்.
……..