எதிர்காலம் கடினமானதாக இருக்கலாம்!

0
112
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று(05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதைத் தவிர, இந்தச் சூழ்நிலையில் இருந்து மீள வேறு தீர்வு இருப்பதாக தான் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அது நல்லதா கெட்டதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் எனவும், முதலில் ஊழியர்கள் மட்டத்தில் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியும் அதற்கு உடன்படவில்லை என்றால் உங்களின் தீர்வு என்னவென்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அல்லது உங்கள் மாற்றுத் தீர்வு என்ன எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்காலம் கண்டிப்பாக கடினமாக இருக்கலாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, தான் அதை மறுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் 6 மாதங்கள் மிகவும் கடினமானது என தெரிவித்துள்ள ஜனாதிபதி, இது நாம் அனுபவித்திராத நேரம், ஆனால் நாம் அதைக் கடந்து செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் திரும்பிச் செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பழைய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகளையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மீண்டும் அந்த பொறிமுறைக்குச் செல்வதில் அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விடயங்கள் தொடர்பாக புதிதாக சிந்திக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Category: ஆசிரியர் தெரிவு இலங்கை கொழும்பு பிரதான செய்திகள்