‘போர்ட் சிட்டி’ சட்டமூலத்துக்கு எதிராகக் கிளர்த்தெழுந்தது அஸ்கிரிய பீடம்! – கோட்டாவுடன் நேரில் பேச முடிவு

0
287
Article Top Ad

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத்தை நிர்வகிப்பதற்கான ஆணைக்குழு சட்டமூலம் நாட்டின் சட்டத்திலும் அதிகாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அறியமுடிகின்றது என்று தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடத்தின் தலைமை செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், இது குறித்து ஜனாதிபதியுடன் பேசி ஒரு தெளிவைப் பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

எமது நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் எதாவது ஒரு காரணி கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தில் உள்ளடக்கப்படுமானால் அதனை எதிர்ப்பதே எமது பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, நாட்டின் நிலத்தை குத்தகைக்கு வழங்கவோ அல்லது வெளிநாடுகளுக்கு விற்கவோ அரசுக்கு உரிமை இல்லை என இலங்கை ராமஞ்ஞ பௌத்த பீடத்தின் பிரதான நாயக்கர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகள் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் நாட்டைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான 30 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்தபோதும் இப்போது நாம் மற்றொரு சிக்கலை எதிர்கொள்கின்றோம். துறைமுக நகரம் என்ற பெயரில் நாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியாகவே நவீன சீன காலனியை நாங்கள் பார்க்கின்றோம்.

புதிய சீன காலனி புறக்கணிக்கப்பட வேண்டும். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நாட்டின் நிலத்தைக் குத்தகைக்கு வழங்கவோ அல்லது விற்பனை செய்வதற்கோ எந்த உரிமையும் இல்லை” – என்றார்.