ஐரோப்பிய சுப்பர் லீக் கால்பந்தாட்டத்தொடர்: கருவிலேயே கலைந்துபோன கனவா?

ஐரோப்பிய சுப்பர் லீக்கை ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு வெளியான நாளில் இருந்து மூன்று நாட்களுக்குள்ளாகவே அந்த எண்ணக்கருவிற்கு சமாதி கட்டப்பட்டுவிட்டதான கருத்துக்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.

0
298
Article Top Ad
ஐரோப்பிய சுப்பர் லீக்கில் இங்கிலாந்து கழகங்கள் இணைவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ரசிகர்கள் ( Photo credit : BBC)

ஐரோப்பாவிலுள்ள முன்னணி கால்பந்தாட்டக் கழகங்களை இணைத்து புதிதாக ஆரம்பிக்கப்படப்போவதாக பெரும் அறிவிப்பின் மத்தியில் கவனம் பெற்ற ஐரோப்பிய சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் ஆரம்பமாகு முன்னரே முடிவிற்கு வந்த கதையாக மாறிப்போகியிருக்கின்றது.

                   12 முன்னணி கழகங்கள்

Picture credit : AFP/Getty Images

ரியல் மட்ரிட் கழகத்தின் தலைமை நிர்வாகி ஃபுளொரிட்டினா பெரஸின் எண்ணக்கருவில் உதயமான ஐரோப்பிய சுப்பர் லீக் கால்பந்தாட்டத்தொடரில் இங்கிலாந்தின் பிரபல கழகங்களான மன்செஸ்டர் யுனைடற், செல்சி, ஆர்சனல், லிவுர்பூல் ,டொடன்ஹாம் ஹொட்ஸ்பூர் மற்றும் மன்செஸ்டர் சிற்றி ஆகிய 6 கழகங்கள்

இத்தாலியின் ஜுவென்டஸ் ,ஏசி மிலான் மற்றும் இன்டர் மிலான் ஆகிய மூன்று கழகங்களும் ஸ்பெயினைச் சேர்ந்த பார்ஸிலோனா, ரியல் மட்ரிட் மற்றும் அத்லடிகோ மட்ரிட்டும் இணைந்து மொத்தம் 12 கழகங்கள்  பங்கேற்பதாக அறிவித்தன.

இன்னும் 3 அணிகள் விரைவில் இணையுமென அறிவிக்கப்பட்டதுடன் கூடுதலாக 5 அணிகளை தகுதிச்சுற்று நடத்தி தேர்வு செய்ய உள்ளனதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்து.

இதனால் மொத்தம் 20 அணிகள் தொடரில் பங்கேற்கும். தலா 10 அணிகள் கொண்ட இரு பிரிவாக பிரித்து லீக் முறையில் போட்டிகள் நடத்துவர். பின் ‘பிளே ஆப்’ முறையில் காலிறுதி. அரையிறுதி பைனல் நடக்குமென தெரிவிக்கப்பட்டிருந்து.

இருப்பினும் கால்பந்தாட்ட ரசிகர்களிடமிருந்தும் சர்வதேச மற்றும் ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் அதிகாரிகளிடமும் இருந்து எழுந்த கடுமையான எதிர்ப்புக்கள் விமர்சனங்கள் எழுந்தன.

பிபா’ எதிர்ப்பு

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’)- FIFA ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யு.இ.எப்.ஏ.இ) இணைந்து இத்தொடருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒருவேளை சூப்பர் லீக் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு தடை விதிக்கும் பட்சத்தில், ரொனால்டோ உள்ளிட்ட வீரர்கள் உலக கோப்பை மற்றும் பல்வேறு கால்பந்து தொடர்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படலாம். தவிர பிரிந்து சென்ற அணிகளின் ரசிகர்களும்இ இது மிகப்பெரிய ‘துரோகச் செயல்’ என வர்ணித்துள்ளனர்.

ரசிகர்களிடமிருந்து இத்தகைய பாரிய எதிர்ப்பு ஏற்படும் என்பதை உணரத்தவறிய இங்கிலாந்தைச் சேர்ந்த ஆறு கழகங்களும் நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்து தாம் ஐரோப்பிய சுப்பர் லீக் தொடரில் இருந்து விலகிக்கொள்வதாக கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தன.

அதனைத் தொடர்ந்து இத்தாலியைச் சேர்ந்த மூன்று கழகங்களும் ஸ்பெயினைச் சேர்ந்த அத்லடிகோ மட்ரிட் கழகமும் விலகும் தீர்மானத்தை புதனன்று அறிவித்தன.

எண்ணக்கரு இன்னமும் இறந்துவிடவில்லை 

ஐரோப்பிய சுப்பர் லீக் தொடரின் ஆரம்ப தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவரும் அந்த எண்ணக்கருவின் பிதாமகருமான ரியல் மட்ரிட் கழகத்தின் தலைவர் ஃபுளொரிட்டினா பெரஸ் ,”இந்த எண்ணக்கரு முழுமையாக இறந்துவிடவோ கைவிடப்பவோ இல்லை மாறாக இது தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இளையர்களுக்குக் காற்பந்து விளையாட்டில் ஈடுபாடு குறைந்து வருவதால் காற்பந்தைக் காப்பாற்றுவதற்காக ஐரோப்பிய சூப்பர் லீக் தொடங்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று ஸ்பானிய காற்பந்து லீக்கின் முன்னணி குழுக்களில் ஒன்றான ரியால் மட்ரிட் குழுத் தலைவர் ஃபுளோரென்டினோ பெரஸ் கூறியுள்ளார்.

அவருக்கு பார்ஸிலோனா கழகத்தின் தலைவர் ஜோன் லபோர்ட்டா ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். ‘ அது மிகவும் அவசியமானது.’ எனத் தெரிவித்துள்ள அவர் மிகப்பெரிய கழகங்களே அதிகளவான நிதியைத் திரட்டுகின்றன.

எனவே திரட்டப்படும் நிதியில் கழகங்களின் வருமானமும் மற்றும் பங்கீடு குறித்த தீர்மானங்களில் எமது குரல்களும் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தற்போது ஐரோப்பிய கழகங்கங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடருக்கு மாற்றாகவே இந்த ஐரோப்பிய சுப்பர் லீக் தொடர் யோசனை முன்வைக்கப்பட்டது. சம்பியன்ஸ் லீக் தொடரில் மொத்தமாக 32 அணிகள் பங்கேற்கின்றன.

ஆனால் ஐரோப்பிய சுப்பர் லீக் தொடரில் 20 அணிகளே பங்கேற்கும் எனக் கூறப்பட்டிருந்தது. சம்பியன்ஸ் லீக் போட்டிகளை ஐரோப்பிய கால்பந்தாட்டக்கழகங்களின் ஒன்றியம் நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.