2790 அடி ஆழத்தில் காணாமற் போன நீர்மூழ்கி : பயணித்த 53 பேரும் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வ அறிவிப்பு

0
228
Article Top Ad

பாலி கடற்பகுதியில் கடந்த புதன்கிழமை காணாமல்போயிருந்த இந்தோனேசியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அது வெடித்துச் சிதறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கடலின் மேற்பரப்பில் இருந்து 800 மீற்றர்கள் அன்றேல் 2790அடி ஆழத்திலேயே இந்த நீர்மூழ்கியி கண்டறியப்பட்டது.

குறித்த நீர்மூழ்கிக் கப்பல் மூன்று பகுதிகளாக வெடித்துச் சிதறியுள்ளதாகவும், அதிலிருந்த 53 பேரும் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ உயிரிழந்த 53 பணியாளர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இந்தோனேசியர்கள் அனைவரும் சோகத்தை பகிர்ந்து கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட 44 ஆண்டுகள் பழமையான நீர்மூழ்கிக் கப்பலான கே.ஆர்.ஐ.நங்கலா-402 என்ற கப்பல் பாலி தீவின் வடக்கே பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட போது தொடர்பை இழந்த நிலையில் கடலில் காணாமல் போயிருந்தது.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் முயற்சியில் இந்தோனேசிய இராணுவத்துக்கு உதவியாக சில பன்னாட்டு கப்பல்களும் ஈடுபட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த கப்பலுடையது என சில பொருட்கள் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.