நாட்டை உடன் முடக்காவிட்டால் இந்தியாவின் நிலைமை ஏற்படும்! – சுகாதார பரிசோதகர் சங்கம் சிவப்பு எச்சரிக்கை

0
190
Article Top Ad

“இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 70 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. உடனடியாக நாட்டை முடக்கி நிலைமைகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் மருந்து மற்றும் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படும்.”

– இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் நிலைமை குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுப்பதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் கொரோனா வைரஸ்  பரவல் நிலைமை குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தற்போது கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படும் எண்ணிக்கையானது 70 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்தால் அதிகளவிலான தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவர்.

தற்போது சிவப்பு எச்சரிக்கை விடும் அளவுக்கு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

உடனடியாக நாட்டை முடக்க வேண்டும் என்பதை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துவிட்டோம்.

அத்தோடு கொரோனாத் தடுப்பு செயலணிக் கூட்டங்களிலும் நாம் இதனை உரிய காரணிகளுடன் கூறியுள்ளோம். ஆனால், அரசியல் தலையீடுகள் காரணமாக நாட்டின் சுகாதார நிலைமைகளைக் கருத்தில்கொள்ளாதுள்ளனர்.

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகள்கூட அரசியல்வாதிகளின் தலையீட்டால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் பிலியந்தல பிரதேசத்தில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் முடக்கப்பட்ட பகுதியொன்று திறக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகளை அறிந்தே சுகாதார அதிகாரிகள் ஒரு பிரதேசத்தை முடக்கினர். ஆனால், அரசியல்வாதிகள் எமது கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறியும் நிலைமை உருவாகியுள்ளது.

பொது முடக்கமே எமக்கு இருக்கும் ஒரே வழிமுறையாகும். உடனடியாக நாம் கட்டுப்பாடுகளை விதித்து இரு வாரகாலமேனும் நாட்டை முடக்காது போனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகும். மரணங்களும் அதிகரிக்கும். இது இந்தியாவின் நிலையை அடையலாம்” – என்றார்.