8 மாவட்டங்களில் ‘கொரோனா’ மேலும் பரவக்கூடிய பேராபத்து – GMOA எச்சரிக்கை

0
166
Article Top Ad

இலங்கையில் தற்போதைய நிலையில் எட்டு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய பேராபத்து காணப்படுகின்றது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA )எச்சரித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாளாந்தம் 100 இற்கும் மேற்பட்ட கொரோனாத் தொற்றாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், காலி, நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அடையாளம் காணப்படுகின்றனர்.

எனவே, குறித்த மாவட்டங்களில் கொரோனாத் தொற்று மேலும் பரவக்கூடிய பேராபத்தான நிலை காணப்படுகின்றது.

எதிர்வரும் வார நாட்களில் கம்பஹா மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இதனைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள அனைத்து மக்களும் மிகவும் பாதுகாப்பான முறையில் செயற்பட வேண்டும்.

கொரோனாத் தொற்று தொடர்பாக நாட்டின் அனைத்து மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். அடுத்த சில வாரங்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.

நாட்டில் தற்போது கொரோனாத் தொற்றானது ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. அத்தோடு எதிர்வரும் வார நாட்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

இதனிடையே, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போல், சுகாதார ஊழியர்களின் குடும்பங்களிடையே தொற்று நோய் பரவி வருகின்றது. அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் சுகாதார அமைச்சு முன்னுரிமை வழங்க வேண்டும்” – என்றார்.