கொரொனா விதிமுறை மீறல் எதிரொலி: இங்கிலாந்துடனான இலங்கையின் எஞ்சிய போட்டிகள் இரத்துச்செய்யப்படுமா?

0
229
Article Top Ad

இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ரி20 தொடரில் பங்கேற்ற 3 போட்டிகளிலும் படுதோல்வியடைந்தது.

இந்தநிலையில் இலங்கை அணியின் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குஸல் மென்டிஸ் ஆகியோர் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அணிகள் கட்டுக்கோப்பாக வழிநடத்தப்படும் பையோ பபிள் காப்பு குமிழியை விட்டு வெளியே சுற்றிய காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பயோ பபிள் நடைமுறைகளை மீறியமைக்காக குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் இலங்கைக்கு அழைத்துவந்து விசாரணைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக இலங்கை அணியின் தலைவர் குசால் பெரேரா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒரு நாள் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. காரணம் நேற்றிரவு இந்த வீரர்கள் வெளியே சுற்றிவிட்டு மீண்டும் ஹோட்டலுக்கு சென்று ஏனைய வீரர்களுடன் பழகியிருக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.

இதனால் ஏனைய வீரர்களுக்கும் கொரோனா அபாயம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. எஞ்சிய போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என இலங்கை கிரிக்கட் நிர்வாகத்திலுள்ள அதிகாரியொருவருடன் பேசியபோது இதுவரை போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது அணிவீரர்கள் விதிமுறை மீறியமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மேலதீக விசாரணைகளின் பின்னரும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு அமையவுமே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை ஜுன் 29 திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாவது போட்டி ஜுலை 2ம் திகதியும் மூன்றாவது போட்டி ஜுலை 4ம் திகதியும் நடைபெற திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்துடனான தொடரை நிறைவுசெய்துகொண்டு இலங்கை அணி தாயகத்தில் இந்திய அணிக்கெதிரான தொடரை ஜுலை 13ம் திகதிமுதல் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.