சர்வதேச செய்திநிறுவனங்களில் முக்கிய இடம்பிடித்துள்ள இலங்கையின் பொருளாதார அவசரநிலை பிரகடனம்

0
176
Article Top Ad

 

படங்கள் நன்றி பிரசாந் இந்திரக்குமார்

இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்ற செய்தி சர்வதேச செய்திநிறுவனங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இலங்கையின் பொருளாதாரம், கடந்த சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. ,ஈஸ்டர் கொரோனா சூழல் நாட்டிற்கு பிரதான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் மத்திய கிழக்கு வீட்டுப்பணிப்பெண்களிடம் இருந்து கிடைக்கும் வருமானத்தில் கடும் வீழ்ச்சி ஆடைத்தொழிற்துறையின் பாதிப்பு சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.

இந்நிலையில், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருப்பு குறைவாலும் பதுக்கல் அதிகரிப்பாலும் நாட்டில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

பால்மா தட்டுப்பாட்டுக்கு மத்தியில் தரங்குறைந்த பால்மா விற்பனை: படங்கள் நன்றி பிரசாந் இந்திரக்குமார்

இந்நிலையில் உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும் அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிறப்பித்துள்ளார். இதன் மூலம், அரிசி, சீனி போன்ற முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களைப் பதுக்கிவைத்திருக்கும் களஞ்சியசாலைகளுக்கு புதிய ஆணையாளர் நியுன்ஹெல்ல விஜயம் செய்தபோது…

 

மேலும், இராணுவ முன்னாள் மேஜர் ஜெனரல் செனரத் நியுன்ஹெல்லவை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார். வியாபாரிகள் சில்லறை வர்த்தகர்கள் பதுக்கும் உணவுப்பொருட்களை பறிமுதல் செய்யவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

படங்கள் நன்றி பிரசாந் இந்திரக்குமார்

அரிசி, நெல், சீனி பால்மா போன்ற உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கு அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரிசி, சீனி பால் மா, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கடைகளில் நீண்டவரிசை காணப்படுகிறது. மண்ணெண்ணெய் சமையல் காஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசி இறக்குமதிக்கு அன்னியச் செலாவணியை பயன்படுத்த உதவும் வகையில், எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும்படி வாகன ஓட்டிகளை இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர்  உதய கம்மன்பில கேட்டுக்கொண்டுள்ளார். எரிபொருள் பயன்பாடு குறையவில்லை என்றால், அதன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.