கோட்டா ஆட்சி தொடர்ந்தால் பட்டினியால் மக்கள் செத்து மடிவர்! – ஐ.தே.க. எச்சரிக்கை

0
130
Article Top Ad

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் ஆட்சி தொடர்ந்தால் பட்டினியால் மக்கள் செத்து மடிவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலி – ஹக்மீமன பகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காலி மாவட்டத்தில் தேயிலைத் தொழிற்துறைகளில் ஈடுபடுவோர் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். உரத் தட்டுப்பாடு காரணமாக தேயிலை செய்கை வழமைக்குத் திரும்ப இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும்.

உலகில் தரமான உரத்தை 350 ரூபாவுக்கு வழங்க முடியாது. கோட்டாபய அரசு ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருந்தது. தரம் குறைந்த உர வகைகளைப் பயன்படுத்துவதனால் மண் வளம் இழக்கும்.

இலங்கையில் அடுத்த ஆண்டு நடுப்பகுதி அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்படும்.

தற்போதைய அரசு எவ்வித நோக்கமும், திட்டமும் இன்றி நாட்டை ஆட்சி செய்வதனால் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. இந்த அரசின் ஆட்சி தொடர்ந்தால் பட்டினியால் மக்கள் செத்து மடிவார்கள்” – என்றார்.