முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான பெரும் பேரணி வெற்றிகரமாக நிறைவடைவு! நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் பலரும் பங்கேற்பு

0
166
Article Top Ad


மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த கடல் வழியான பேரணி வெற்றிகரமாகப் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

முல்லைத்தீவு – கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை 7.15 மணியளவில் கடல் வழியாகப் படகுகளில் ஆரம்பித்த பேரணி யாழ்., பருத்தித்துறை துறைமுகத்தை காலை 10 மணியளவில் வந்தடைந்தது.

இழுவைமடி மீன்பிடி முறைமை, கடற்தொழில் மற்றும் நீரியல் வள சட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தத்தின் பின்னர் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் இன்னமும் முழுமையாக செயற்படுத்தப்படாதுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் றோலர் மீன்பிடி முறைமையின் காரணமாக வடக்கு மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு நீதி கோரி கடல் வழியாக இந்தக்  கண்டனப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய போராட்டத்தில் கடற்றொழிலாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான  எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கலந்துகொண்டனர்.