தமிழர்கள் எந்த இனத்துக்கும் அடுத்தபடியான மக்கள் அல்லர் இலங்கை எமது நாடு என்று சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டு

0
186
Article Top Ad

 

 

“இலங்கை எனும் இந்த நாட்டில் தமிழர்களாகிய எமக்கும் சம உரிமைகள் உள்ளன. இது எமது நாடு. இங்கு நாம் எந்தவொரு இனத்தவருக்கும் அடுத்தபடியான மக்கள் அல்லர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சுய மரியாதை கொண்டுள்ள எந்தவொரு தமிழரும் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் அங்கம் பெற முடியாது எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீதி அமைச்சு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு, கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, டிஜிட்டல் தொழில்நுட்பம்  மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த அரசின் நீதி அமைச்சர், ஆப்கானிஸ்தான் கப்பற்துறை அமைச்சர் போன்றதொரு நிலையில் உள்ளார் என கடந்த ஆண்டு நான் கூறியிருந்தேன். அதனையே நான் மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஏனென்றால் இன்றும் அவர் உறுதியில்லாத நிலையில் இந்த அமைச்சில் உள்ளார். நீதி அமைச்சர் தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்ய முயற்சித்துக் கொண்டுள்ளார் என்று கடந்த காலங்களில் ஊடகங்களில் அறிந்துகொண்டோம். அவர் தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்ய முயற்சித்தும் அதனைச் செய்ய முடியாத நிலையொன்றில் உள்ளார். ஆனால், அவரால் அதனைச் செய்ய முடியும். எனினும், அதனை எவ்வாறு செய்ய முடியும் எனத் தெரியாத நிலையில் அவர் உள்ளார் என்றே நாம் நினைக்கின்றோம்.

அதேபோல் நீதி செயற்பாடுகளில் அரசின் அநாவசிய தலையீடுகள் காணப்படுகின்றன என்பது தெளிவாக வெளிப்பட்டுள்ளன. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவை வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கவுள்ளதாக செய்திகளில் அறிந்துகொண்டேன். காலஞ்சென்ற முன்னாள் ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்குப்  பதிலாக இவர் நியமிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. காலஞ்சென்ற முன்னாள் ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில்  11 இளைஞர் கடத்தல் மற்றும் திருகோணமலை கடற்படை முகாமில் அவர்களைக் கொலை செய்த வழக்கில் வசந்த கரன்னகொட சந்தேகநபராக உள்ளார். அவ்வாறான ஒருவரை சட்டமா அதிபர் அவசர அவசரமாக நியாயப்படுத்தி, அவரது வழக்குகளை நீக்கி அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கின்றார்.

இறந்தவர்களின் குடும்பத்தினர் இந்தச் செயற்பாடுகளுக்கு நியாயம்  கோரி போராடிக்கொண்டுள்ள நிலையில் அதற்கான தீர்ப்பு கிடைக்கும் என நீண்ட காலமாகக் காத்திருந்து  ஓரளவேனும் நீதி நிலைநாட்டப்படும் சூழ்நிலை  உருவாக்கி வந்த நிலையில் மீண்டும் வழக்கு பின்வாங்கப்பட்டுள்ளது. அவரை ஆளுநராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரங்கள் மீளப்பெற்றுக்கொள்ளப்படுகின்றன. சட்டமா அதிபர் உண்மையில் சுயாதீனநபராக இருக்க வேண்டும், அரசியல் நியமனமாக இருந்தாலும் கூட செயற்பாடுகள் சுயாதீனமாக இருக்க வேண்டும். ஆனால், அதனை அவதானிக்க முடியவில்லை.

அதேபோல் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்த, இன்னொரு வழக்கில் சந்தேகநபராக உள்ள ஒருவரை செயலணி ஒன்றின் தலைவராக அரசாங்கம் நியமித்துள்ளது. இதற்கு நீதி அமைச்சர் எதிர்ப்பை வெளிப்படுத்தியும் அதில் மாற்றம் ஏற்படவில்லை. அதேபோல் தமிழர்கள் இந்தச்  செயலணியில் நியமிக்கப்படவில்லை. அது நல்ல விடயம் என்றே கருதுகின்றேன். சுயமரியாதையை கொண்டுள்ள எந்த தமிழரும் இந்த செயலணியில் அங்கம் பெற முடியாது. ஒரு சிலர் தமது சுயமரியாதையை இழந்து இந்தச் செயலணியில் உள்ளனர். ஆனால், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையில் உள்ள இந்த செயலணி ஒரு அநீதியான செயலணியாகும்.

அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுப்போம் என இந்தியாவுக்கு மூன்று சந்தர்ப்பங்களில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வாக்குறுதி வழங்கியுள்ளார். அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகத்துடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையிலும், சர்வதேச சமூகத்துக்கும் தொடர்ச்சியாக இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். அதிகாரப் பரவலாக்கலைக் கண்டிப்பாக முன்னெடுப்போம் எனக் கூறி, 13 ஆம் திருத்தத்தின் மூலமாக இதனைக் கையாள்வோம், மாகாணசபை முறைமையின் ஊடாக அதிகாரங்களை மாகாணங்களுக்குப்  பகிர்வோம், மாகாணங்களுக்கு ஏற்ற சட்டங்களை அவர்களே உருவாக்கும் அதிகாரத்தை வழங்குவோம் எனக் கூறி உள்ளக அதிகாரங்களைப் பரவலாக்கி மேம்படுத்த, மாகாணங்களுக்கு சட்டங்களை மேம்படுத்த, அதிகாரம் வழங்குவதாக உலகத்துக்கு வாக்குறுதி வழங்கிவிட்டு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையை வகுப்பது நியாயமான ஒன்றல்ல. இது தற்போதைய அரசமைப்பு உருவாக்கத்துக்கு முரணானது மட்டுமல்லாது, சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறும் செயற்பாடாகும்.

ஆகவேதான் இந்த செயலணியில் சுய மரியாதையுடன தமிழர்கள் எவரும் அங்கம் வகிக்க முடியாது. அதுமட்டுமல்ல இந்தச் செயலணி உருவாக்கப்பட்ட வேளையில் கூட சுயமாக இதற்கு தமிழர்களை ஜனாதிபதி நியமிக்கவில்லை. அப்படியென்றால் அவர்கள் கூற நினைப்பது என்ன? எம்மைப் பின் சிந்திக்கும் பட்டியலில் வைத்துள்ளார்கள் என்பதேயாகும்.

இந்த நாட்டில் எமக்கும் சம உரிமைகள் உள்ளன. இது எமது நாடு, இங்கு நாம் எந்தவொரு இனத்தவருக்கும் அடுத்தபடியான மக்கள் அல்ல. எனவேதான் இதனை நாம் கண்டிக்கின்றோம். அதேபோல் நீதி அமைச்சரும் எமது சமூகத்தில் இருந்து வந்தவர் என்ற காரணத்தால் நீங்கள் இந்த விடயங்களைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் இந்த அரசில் இருந்து கொண்டு உங்கள் சமூகத்துக்கு எதிராகச் செயற்பட முடியாது. எனவே, நீங்கள் அமைச்சுப் பதவியைத் துறந்து வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.
,,,,,,,,,,,,,,,