கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய “பிக்கு” வேந்தரிடமிருந்து பட்டம் பெறமறுத்த மாணவர்கள்: அரசியல் நியமனத்திற்கு தமது பாணியில் எதிர்ப்பு ( காணொளி)

0
293
Article Top Ad

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நாரஹேன்பிட அபயராம விகாராதிபதி சங்கைக்குரிய முருத்தொட்டுவே ஆனந்த தேரரை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ சமீபத்தில் நியமித்திருந்தார்.

இந்த நியமனத்திற்கு பல ஆசிரியர் அமைப்புக்களும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் அமைப்பும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 2019ம் ஆண்டிற்கான கொழும்பு பல்கலைக்கழக சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு விழாவில் தமது அதிருப்தியை விழா மேடையில் வெளிப்படுத்தியுள்ளனர் .

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவர்களில் பலர் தமது கரங்களில் கறுப்புப்பட்டியை அணிந்தும் மேலும் பலர் சங்கைக்குரிய தேரரிடமிருந்து பட்டம்பெற்றதை உறுதிப்படுத்தும் சான்றுப்பத்திரத்தை பெறமறுத்தும் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

சில மாணவர்கள் தமது சான்றுப்ப்த்திரத்தை பிக்கு வேந்தரிடமிருந்து பெற்றுக்கொண்டபோதும் உபவேந்தரான பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ரனவுடனேயே புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்தப்பட்டமளிப்பு நிகழ்வை முகாமைத்துவ மற்றும் நிதியியல் பீடத்தின் ஆசிரியர் அமைப்பு பகிர்ஷ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக சங்கைக்குரிய முருத்தொடுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டமைக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலேயே தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.