திருக்கோவில் பொலிஸ் கொடூரம்: உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு

0
126
Article Top Ad

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதுடன், மக்கள் மத்தியில் பீதி நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர்களான நவீனன், துசார, பிரபுதன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்த முழுமையான விபரம்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மொனராகலையைச் சேர்ந்த பொலிஸ் சாஜன் குமார என்பவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்கம விடுமுறை வழங்காததையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸ் சாஜன் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ரி 56 துப்பாக்கியால் பொலிஸ்சாஜன் சரமாரியாக துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிஸார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து, சம்பவ இடத்தில் 3 பொலிஸார் உயிரிழந்ததுடன், பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் சாஜன் அங்கிருந்து மோட்டர் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில், மொனராகலை அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து, அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாணா சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சென்று நிலமையை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது