முப்பது நாட்களுக்கு முன் பூமியில் இருந்து ஏவப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தை அவதானிப்பதற்கு விண்வெளியில் தனது நிலையை அடைந்துள்ளது.
நிலை அலைவு புள்ளி 2 என்று அழைக்கப்படும் பூமியின் இரவு பக்கத்தில் இருந்து மில்லியன் மைல்கள் (1.5 மில்லியன் கிலோ மீற்றர்) தொலைவிலேயே ஜேம்ஸ் வெப் தற்போது நிலை கொண்டுள்ளது.
இந்நிலையில் பூமியில் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் அந்த விண்வெளி தொலைநோக்கியை விஞ்ஞான ஆய்வுக்கு தயார்படுத்தும் பணிகளில் அடுத்த சில மாதங்களுக்கு ஈடுபடவுள்ளனர்.
இதில் இந்த கண்காணிப்பகத்தின் நான்கு உபகரணங்களை இயக்குவது மற்றும் அதன் கண்ணாடிகளை மையப்படுத்துவது, குறிப்பாக 6.5 மீற்றர் அகலமான முதன்மை பிரதிபலிப்பானை இயக்குவது உட்பட முக்கிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
பிரபல ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கிக்கு பதிலான தயாரிக்கப்பட்ட ஜேம்ஸ் வெப், பிரபஞ்சத்தில் முதலில் பிரகாசித்த நட்சத்திரங்களின் படங்களை பெறுவது மற்றும் தொலைதூர கிரகங்களை ஆய்வு செய்தல் மற்றும் அவை உயிர்வாழ தகுதியானவையா என்பதை கண்டறிவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ளது.