சம்பிக்க என்ன ஆட்டம் போட்டாலும் சஜித் தான் ஜனாதிபதி வேட்பாளர் – ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் மீண்டும் திட்டவட்டம்

0
226
Article Top Ad

சம்பிக்க ரணவக்க என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸதான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, 43 ஆம் படையணி எனும் அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளார். அதனைப் பலப்படுத்தி வருகின்றார். அண்மையில் மாநாடொன்றையும் நடத்தியிருந்தார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே சம்பிக்க இவ்வாறு செயற்படுகின்றார் என அரசியல் வட்டாரங்களில் கதை அடிபடுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்,

‘சம்பிக்க எம்முடனேயே இருக்கின்றார். அவர் தனி அணியொன்றை உருவாக்கினால் கூட அது எமக்குப் பலமாகவும் அரசுக்குப் பாதிப்பாகவுமே அமையும். யார் எப்படியான அரசியல் நகர்வை முன்னெடுத்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவே தான் என்றனர்.