பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான 8 பேருக்குப் பிணை!

0
191
Article Top Ad

குண்டுகளைத் தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 2019ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.

2019ஆம் ஆண்டு முதலாம் மாதம் 5 ஆம் திகதி புளியங்குளம் பொலிஸாரால் கிளைமோர் குண்டை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இதில் 9ஆவது சந்தேகநபரான ஆனந்தராஜா என்பவர் கைதுசெய்யப்படாத நிலையில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த 8 பேருக்கும் ஆதரவாக சி.எச்.ஆர்.டி. நிறுவனம் சட்ட உதவியை வழங்கியிருந்தது. இந்த நிறுவனத்தின் ஊடாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கலும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்  கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனை சபைக்கு  குறித்த விடயம்  விசாரணைக்காகப் பாரப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குக் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் பலனாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 7:1 பிரிவின் பிரகாரம் சட்டமா அதிபரால் பிணையில் விடுவிப்பதற்கான சம்மதக் கடிதம் நீதிமன்றத்துக்கு அனுப்பட்டிருந்தது. இதையடுத்துத் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சார்பில் வவுனியா நீதிமன்றத்தில் சட்டத்தரணி செ.கேதீஸ்வரன்  ஆஜராகி குறித்த கடிதம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பிரகாரம் 8 பேரும் பதில் நீதிபதி க.தயாபரனால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.