கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

0
199
Article Top Ad

கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் பொது இடங்கள் குறித்து அடுத்த சில நாட்களில் தகவல் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது இடங்களில் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக் கருத்து வெளியிட்ட சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், எதிர்காலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த இடங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், கொரோனா தடுப்புக்கான தொழில்நுட்பக் குழு கொரோனா தடுப்பூசி அட்டையை எங்கு கட்டாயமாக்குவது என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பொது இடங்களுக்கு நுழையும்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக தடுப்பூசி அட்டையை சமர்பிப்பது கட்டாயமாகும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.