புச்சாவை விட போரோட்யங்காவில் நிலைமை மிக மோசம் – உக்ரைன் ஜனாதிபதி கவலை

0
247
Article Top Ad

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 43 நாட்களாகி விட்டன. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் ரஷியாவின் கனவு, உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் உருக்குலைந்து போனது. இந்த சூழலில் போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:-

ஏப்ரல் 08, 10.30 A.M

புச்சாவை விட போரோட்யங்காவில் நிலைமை மிக மோசம் – உக்ரைன் அதிபர் கவலை

உக்ரேனின் புச்சா நகரில் பொதுமக்கள் மோசமாக கொல்லப்பட்டிருப்பது குறித்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது போரோட்யங்கா என்னும் பகுதியில் அதைவிட மோசமான கொலைகள் நடந்திருப்பதாக உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

முகநூல் மூலம் உக்ரேனிய மக்களுக்கு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“புச்சாவை காட்டிலும் அங்கு நிலைமை மோசமாகவுள்ளது. ரஷிய ஆக்ரமிப்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

புச்சா மற்றும் போரோட்யங்கா ஆகிய இரண்டுமே உக்ரைன் தலைநகர் கீயவின் புறநகர் பகுதிகள். கீயவை கைப்பற்ற அங்கு கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 08, 09.30 A.M

கியூ மற்றும் மரியுபோல் நகரங்களில் உக்ரைன் படையினர் ஆய்வு

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் மக்கள் மாற்று இடம் நோக்கி நகர்ந்து செல்கின்றனர். கியூ மற்றும் மரியுபோல், புச்சா உள்ளிட்ட நகரங்களை விட்டு ரஷிய படையினர் வெளியேறி உள்ளனர். இந்த பகுதிகளில் வெடிகுண்டுகள் ஏதும் உள்ளதா என உக்ரைன் படையினர் மோப்ப நாய் உதவியுடன் தேடி வருகின்றனர்.

ஏப்ரல் 08, 08.30 A.M

உக்ரைனியர்களின் உடல்களை வைத்து ரஷிய நாடகம் – ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

எங்கள் மீது பழி சுமத்த மரியுபோலில் ரஷிய படைகளால் கொல்லப்பட்ட உக்ரைனியர்களின் உடல்களை பயன்படுத்தி ரஷியா நாடகம் நடத்த உள்ளது. உக்ரைன் மீது வீண் பழியை சுமத்த ரஷிய திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார்.

ஏப்ரல் 08, 05.59 a.m

புச்சா நகரை விட தலைநகர் கீவ்வுக்கு அருகிலுள்ள போரோடியங்காவின் நிலைமை “மிகவும் பயங்கரமானது” என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 08, 05.07 a.m

ரஷியா, பெலாரஸ் வர்த்தக நிலையை ரத்து செய்வதற்கான மசோதாக்களில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 08, 04.35 a.m

உக்ரைன் படையெடுப்பால் ரஷியாவுடனான வழக்கமான வர்த்தக உறவுகளை அமெரிக்கா முடித்துக் கொள்கிறது என்று ஏ.எப்.பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

ஏப்ரல் 08, 03.42 a.m

ஜி7 நாடுகள் ரஷியாவிற்கு எதிரான புதிய பொருளாதார தடைகளை ஒப்புக்கொள்கின்றன என்று அறிக்கை கூறுவதாக ஏ.எப்.பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

ஏப்ரல் 08, 03.05 a.m

போரின் தற்போதைய நிலவரப்படி, இந்த மோதலின் தொடக்கத்திலிருந்து உக்ரைனுக்கு 1.7 பில்லியன் டாலர் பாதுகாப்பு உதவி ஆயுதங்களை வழங்கியுள்ளோம். உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்குவதை நாங்கள் நிறுத்தவில்லை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 08, 02.35 a.m

ரஷிய நிலக்கரி மீதான தடைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

ஏப்ரல் 08, 01.55 a.m

மரியுபோலில் 5,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ரஷிய சார்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 08, 01.12 a.m

கீவ் அருகே இடிந்த இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களில் 26 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 08, 12.41 a.m

மெலிடோபோலில் 100க்கும் மேற்பட்டோரை ரஷியா கடத்தி உள்ளது – அந்நகர மேயர் தகவல்

மெலிடோபோலில் 100க்கும் மேற்பட்டவர்களை ரஷியா கடத்திச் சென்றதாக மரியுபோல் மேயர் தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை, ரஷியர்கள் மெலிடோபோல் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை கடத்திச் சென்று, ரஷிய ஆணையின் கீழ் கல்வியை மீண்டும் தொடங்க முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 08, 12.12 a.m

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க ‘நேட்டோ’ முடிவு

ரஷியாவின் கவனம் தற்போது கிழக்கு உக்ரைன் பக்கம் திரும்பி உள்ளது. டான்பாஸ் என அழைக்கப்படுகிற இந்த பிராந்தியத்தை முற்றிலுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷியா முயற்சிக்கிறது. தற்போது டான்பாஸ் பிராந்தியத்தின் கிழக்கு பகுதியில் முன்னேற்றம் காண்பதில் ரஷியா கவனம் செலுத்துகிறது.

வடக்கு உக்ரைனிய கிராமங்களில் எதிர்தாக்குதல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உள்ளூர் மக்களை ரஷிய துருப்புகள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. மரியுபோல் நகரில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதன் மேயர் தெரிவித்தார். சர்வதேச விசாரணையில் தலையிடும் வகையில் போர்க்குற்ற ஆதாரங்களை மறைக்க ரஷியா முயற்சிக்கிறது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார். ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ள மரியுபோல், பெர்டியான்ஸ்க், மெலிடோபோல் உள்ளிடவற்றில் இருந்து 5 ஆயிரம் பொதுமக்கள் இப்போது வெளியேறி உள்ளனர்.

நேட்டோ வெளியுறவு மந்திரிகள் கூட்டம், பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் நேற்று நடந்தது. இதற்கு மத்தியில் உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா, அங்கு நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “எங்களுக்கு தேவை ஆயுதங்கள், ஆயுதங்கள், ஆயுதங்கள்தான். நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறும்போது, “எப்படி போரிடுவது என்பது எங்களுக்கு தெரியும். எப்படி ஜெயிப்பது என்பதுவும் தெரியும். எங்களுக்கு எந்த அளவுக்கு ஆயுதங்கள் கூடுதலாக, விரைவாக வந்து சேருகிறபோது இன்னும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற முடியும்” என கூறினார்.

உக்ரைனுக்கான ஆதரவை வலுப்படுத்த நேட்டோ நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இதை நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “எங்கள் கூட்டணி உக்ரைனை ஆதரிக்கிறது. அனைத்து நட்பு நாடுகளையும் பாதுகாப்பதற்கும், நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். இதில் சந்தேகம் இல்லை. உக்ரைனுக்கு தேவையான அதிக வான்பாதுகாப்பு ஆயுதங்கள், டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், கனரக ஆயுதங்கள், இன்னும் பலவகையிலான ஆதரவையும் வழங்குவோம்” என குறிப்பிட்டார்.

பிரசல்ஸ் நகரில் உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவை சந்தித்து பேசியபிறகு ஜி-7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் புச்சாவிலும், பிற உக்ரைனிய நகரங்களிலும் நடந்துள்ள படுகொலைகள், சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்களாக பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

ரஷிய படையினருக்கு எதிராக உக்ரைன் படையினர் போர்க்குற்றங்கள் செய்துள்ளாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலோபா கூறினார்.

ஐரோப்பிய யூனியன் நாடுகள், ரஷியா மீது 5-வது பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி வருகின்றன. புச்சா நகரில் நடந்துள்ள படுகொலைகளால் அதிர்ந்து போன ஐரோப்பிய கூட்டமைப்பு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ரஷிய கச்சா எண்ணெய்க்கு தடை விதித்துள்ள நிலையில் அடுத்து அந்த நாட்டின் நிலக்கரி இறக்குமதிக்கும் தடை விதிக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.30 ஆயிரம் கோடி) மதிப்பிலானதாக இருக்கும். நிலக்கரி தடை, ரஷியாவுடனான எரிசக்தி உறவுகளை துண்டிப்பதற்கான தடையை உடைப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.