சந்தோஷ் கிண்ண கால்பந்து – 7 ஆவது முறையாக கிண்ணம் வென்றது கேரளா அணி

0
279
Article Top Ad

சந்தோஷ் கிண்ண கால்பந்தின் இறுதிப் போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தி கேரள அணி கிண்ணத்தை வென்றது.

75 ஆவது தேசிய அளவிலான சந்தோஷ் கிண்ண கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் தொடங்கி நடைபெற்று வந்தன.

2 ஆண்டுகளுக்கு பிறகு சந்தோஷ் கிண்ண கால்பந்து தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்றன. அவை 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

அதன்படி, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் மணிப்பூர் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.  முதலாவது அரையிறுதி போட்டியில், கேரளா – கர்நாடகா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. முதலாவது அரையிறுதி போட்டியில், கேரளா 7-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை அபாரமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதி போட்டியில், மேற்கு வங்கம் – மணிப்பூர் அணிகள் களம் கண்டன. இரண்டாவது அரையிறுதி போட்டியில், மேற்கு வங்கம் 3-0 என்ற கோல் கணக்கில் மணிப்பூர் அணியை அபாரமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன்மூலம், 75 ஆவது சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், 32 முறை கிண்ணத்தைக் கைப்பற்றிய மேற்கு வங்க அணி, கேரள அணியை எதிர்கொண்டது. முன்னதாக நடைபெற்ற குழு – ஏ பிரிவு ஆட்டத்தில் மேற்கு வங்க அணியை கேரளா வீழ்த்தியிருந்தது.

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையே நேற்று இறுதிப்போட்டி நடந்தது. ஆட்ட நேர இறுதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் முடிவில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்திருந்தன. அதன் பின்னர் பெனால்டி ஷூட்-அவுட்டில் கேரளா 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 7வது முறையாக சந்தோஷ் கிண்ணத்தைக் கைப்பற்றியது.