புதிய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை எப்போது? கோட்டா பதில்

0
204
Article Top Ad

“இந்த வாரத்துக்குள் புதிய அரசு ஸ்தாபிக்கப்படும். அத்துடன் புதிய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையும் நியமிக்கப்படும்.” இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு இன்றிரவு ஆற்றிய விசேட உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜபக்சக்கள் இல்லாத, இளம் உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுத்தேன். ஆனால், பிரதமர் பதவி விலகியதும் அமைச்சரவையும் கலைந்தது. புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க இதன்மூலம் இடமளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசம்பாவித சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன். முழுமையான விசாரணையை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன்.

இந்த வாரத்துக்குள் புதிய அரசு ஸ்தாபிக்கப்படும். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையுள்ள, மக்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய ஒருவரை பிரதமராக்குவேன். அமைச்சரவையும் நியமிக்கப்படும்.

நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசமைப்பு மறுசீரமைப்பு இடம்பெறும்.

ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். புதிய அரசு நியமிக்கப்பட்ட பின்னர் – நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், அந்தக் கோரிக்கை தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கத் தயார்” – என்றார்.