இரண்டாவது ரி-20 போட்டியிலும் இலங்கை தோல்வி!

0
114
Article Top Ad

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா அணி முன்னிலைப் பெற்றுள்ளதோடு தொடரையும் வென்றுள்ளது.

கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சரித் அசலங்க 39 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கேன் ரிச்சட்சன் 4 விக்கெட்டுகளையும் ஜெய் ரிச்சட்சன் 3 விக்கெட்டுகளையும் க்ளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, 17.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மத்தியு வேட் ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களையும் ஆரோன் பின்ஞ் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர மற்றும் நுவான் துசார ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற மத்தியு வேட் தெரிவுசெய்யப்பட்டார்.