இலங்கையில் உக்கிரமடையும் எரிபொருள் நெருக்கடி!

0
131
Article Top Ad

இலங்கையில் எரிபொருளுக்கு நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதை அரசாங்கம் வரையறை செய்துள்ளது. அத்தியாவசிய சேவைக்கு மட்டும் எரிபொருள் வழங்கப்படுகிறது. ஆனால் அத்தியாவசிய தேவைக்கு கூட எரிபொருள் கிடைப்பது இல்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை கண்டித்து கொழும்புவில் ஜனாதிபதி அலுவலகம் முன்பு ஆசிரியர்களும், மருத்துவ பணியாளர்களும் போராட்டம் நடத்தினர். இலங்கையில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் நாடே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக போராட்டம் நடத்திய ஆசிரியர்களும், மருத்துவ ஊழியர்களும் அரசு மீதான கோபத்தை வெளிப்படுத்தினர்.

இலங்கை தேசிய மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஜெயந்தா பந்தாரா இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், நாட்டின் சுகாதாரத்துறை 90 சதவீதம் முடங்கிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

இதேவேளை நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் உயிரிழக்கும் சோகம் ஏற்படுவதாக மருத்துவமனை பணியாளர் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கை ஆசிரிய சங்கத தலைவர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை அரசால், நாட்டை முடக்கத்தான் முடியும். மாறாக மக்களுக்கு தீர்வை வழங்க முடியாதென ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசு, பொதுப்போக்குவரத்து இயங்கும் என கூறப்பட்டிருந்தாலும், தனியார் பேருந்துகள் சேவையை இடைநிறுத்தியுள்ளதால் போக்குவரத்து துறை முடங்கியுள்ளது. மக்கள் தமது அத்தியாவசிய போக்குவரத்தைக்கூட செய்யமுடியாது திண்டாடிவருகின்றனர்.

ஏற்கெனவே நாட்டில் உணவுப்பற்றாக்குறை நிலவுவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் அடுத்த சில வாரங்களில் பாரிய வன்முறைகள் வெடிக்கலாமென அரசியல் வாய்வாளார்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.