இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!

0
137
Article Top Ad

இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 1-ம் திகதி தொடங்கியது.

இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கியது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ஓட்டங்களை சேர்த்தது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 106 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 132 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சில் 245 ஓட்டங்களை மட்டுமே இந்தியா அணி எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ஓட்டங்களை நிர்ணயித்தது.

இதனை தொடர்ந்து 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ரூவ்லி களமிறங்கினர்.

இரு வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜாக் க்ரூவ்லி 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஒலிவ் போப் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் 56 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் 109 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது.

அந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், அடுத்து வந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர். 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் 76 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 72 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

ஜோ ரூட் – பேர்ஸ்டோவ் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவ்-ஜோரூட் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 378 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது.