ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது ஹாங்காங்!

0
95
Article Top Ad

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ஆம் திகதி தொடங்குகிறது.

இந்த போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன. ஒருநாடு மட்டும் தகுதி சுற்றில் இருந்து நுழையும்.

இதில் ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகள் பங்கேற்று விளையாடின. சிங்கப்பூர் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று வாய்ப்பை இழந்தது.

நேற்று இரவு நடந்த கடைசி ‘லீக்’ ஆட்டங்களில் குவைத்-சிங்கப்பூர், ஆங்காங்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. குவைத்துக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி 19.5 ஓவரில் 104 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் குவைத் அணி 7.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆங்காங்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மோதிய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த ஆங்காங் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 19.3 ஓவரில் 147 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலக்கை நோக்கி விளையாடிய ஆங்காங் 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

ஆங்காங் அணி தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இதன் மூலம் அந்த அணி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது. ஹாங்காங் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளன. இந்த அணி முதல் போட்டியில் சிங்கப்பூரை எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அடுத்து குவைத்தை எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.