சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக ரோஹினி கவிரத்ன தெரிவு!

0
77
Article Top Ad

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் புதிய தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன நேற்றுத் (21) தெரிவுசெய்யப்பட்டார்.

இவருடைய பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் வழிமொழிந்தார்.

இதன் இணை உப தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே நியமிக்கப்பட்டதுடன், இவருடைய பெயரை ரோஹினி கவிரத்ன முன்மொழிந்ததுடன், கின்ஸ் நெல்சன் வழிமொழிந்தார்.

மற்றுமொரு இணை உபதலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நியமிக்கப்பட்டார். இவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க வழிமொழிந்தார்.

இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களைத் தொடர்புபடுத்தி சிறுவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் நேற்று (21) ஒன்பதாவது பாராளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடியபோதே இந்த நியமனங்கள் இடம்பெற்றன.

இக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஒன்றியத்தின் செயலாளரும், பாராளுமன்றப் பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, இந்த ஒன்றியம் ஏழாவது பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்டிருந்ததுடன், எட்டாவது பாராளுமன்றத்தில் வெற்றிகரமாகச் செயற்பட்டிருந்ததாகக் கூறினார்.

சிறுவர்களின் நல்வாழ்வுக்கான கொள்கைகளை மாற்றம் செய்வது அல்லது புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் சகல சிறுவர்களினதும் நல்வாழ்வு குறித்த கொள்கைகளை தொடர்ந்தும் மறுஆய்வு செய்வது, சிறுவர்களுக்காகப் பணியாற்றும் பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுவது மற்றும் சிறுவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிறுவனங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்வது என்பன இந்த ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களாகும் எனப் பிரதிச் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்துடன் இணைந்து தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்த்திருப்பதாக இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான முன்மொழிவுகளை அடுத்த கூட்ட தினத்தில் முன்வைக்க முடியும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, ஜே.சி. அலவத்துவல, கே.சுஜித் சஞ்சய் பெரேரா, ஹேஷா விதானகே, டபிள்யூ.எச்.எம்.தர்மசேன ஆகியோரும் கலந்து கொண்டதுடன், எதிர்வரும் 23ஆம் திகதி அடுத்த கூட்டம் நடைபெறவுள்ளது.