வறுமையிலிருந்து மீண்டெழுகிறது இந்தியா ; ஐ.நா. அறிக்கை!

0
97
Article Top Ad

ஐ.நா. மேம்பாட்டு திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டமும் இணைந்து புதிய வறுமை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- உலகத்தில் 111 நாடுகளில் 120 கோடிபேர், அதாவது 19.1 சதவீத மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள்.

அவர்களில் பாதிப்பேர், அதாவது 59 கோடியே 30 லட்சம்பேர், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்தியாவை பொறுத்தவரை, 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 41 கோடியே 50 லட்சம்பேர், வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர். குறிப்பாக, 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2015-2016 நிதிஆண்டுக்குள் 27 கோடியே 50 லட்சம் பேரும், 2015-2016 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 14 கோடி பேரும் வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டார்கள்.

இது ஒரு வரலாற்றுசிறப்புமிக்க மாற்றம். 2030-ம் ஆண்டுக்குள், வறுமையில் வாழும் ஆண், பெண், குழந்தைகள் எண்ணிக்கையை பாதியாக குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதே ரீதியில் சென்றால், அந்த இலக்கை எட்டுவது சாத்தியமானதுதான். இந்த முன்னேற்றத்தையும் மீறி, 2020-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்குப்படி, உலகிலேயே அதிகமான ஏழைகள் இருப்பது இந்தியாவில்தான். அங்கு 22 கோடியே 89 லட்சம் ஏழைகள் இருக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில்தான் நைஜீரியா (9 கோடியே 67 லட்சம்) உள்ளது. இந்த 22 கோடியே 89 லட்சம் ஏழைகளை குறைப்பது கடினமான பணியாகவே இருக்கும்.

கொரோனா தாக்கம், எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடிய நாடாக இந்தியா இருக்கிறது. உலகிலேயே அதிகமான ஏழைக்குழந்தைகள் இருப்பதும் இந்தியாவில்தான். 9 கோடியே 70 லட்சம் ஏழைக்குழந்தைகள் உள்ளனர். மற்ற நாடுகளின், அனைத்து வயதினரை சேர்ந்த மொத்த ஏழைகளின் எண்ணிக்கையை விட இது அதிகம்.

இந்தியாவில் 5-ல் ஒரு குழந்தை, ஏழை குழந்தையாக உள்ளது. இந்தியாவில் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், காஷ்மீர், ஆந்திரா, சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த 7 ஆண்டுகளில் வறுமை குறைந்துள்ளது. இந்தியாவில் கிராமப்புற பகுதிகளில்தான் அதிக ஏழைகள் வசிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் அவர்கள் எண்ணிக்கை குறைவுதான். அதுபோல், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் வறுமை அதிகமாகவும், ஆண் தலைமை தாங்கும் குடும்பத்தில் வறுமை குறைவாகவும் உள்ளது. இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.