உள்நாட்டுப் பொறிமுறையிலான தீர்வு ஏமாற்று வித்தையே! – தினேஷுக்கு ஸ்ரீநேசன் பதிலடி 

0
104
Article Top Ad
“உள்நாட்டுப் பொறிமுறை மூலமான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஏமாற்று வித்தையே.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“அண்மையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன இனப்பிரச்சினைக்கான தீர்வை உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக வழங்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடந்த கால வரலாற்றுப் படிப்பினைகளைப் புரட்டிப் பார்க்கின்ற போது இதனை நம்ப முடியாதுள்ளது.

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி –  செல்வா ஒப்பந்தம், ஜெயவர்த்தனாவின் மாவட்ட அபிவிருத்தி சபை, சந்திரிகாவின் பிராந்திய சபைத் திட்டம், மைத்திரி – ரணிலின் நாடாளுமன்ற யாப்பு நிர்ணய சபை மூலமான தீர்வு முயற்சி, மஹிந்தவின் 13 பிளஸ் வாக்குறுதி யாவும் ஏமாற்று வித்தைகளாகவே அமைந்தன. எனவே, தினேஷின் உள்நாட்டுப்பொறிமுறை என்பதும் அரசியல் ஏமாற்று வித்தை என்றே தெரிகின்றது.

உண்மையில் இனப்பிரச்சினை தீர்வு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த நிறைவான சமஷ்டியாகவே அமைய முடியும்.

1965 காலத்துக்குரிய மாவட்ட சபை முறை தீர்வு  என்பது அரசியல் சேட்டையாகவே அமையும். அது தீர்வாக அமையாது.

அதேவேளை, கிழக்கைத் தவிர்த்த, வடக்குக்கான தீர்வு என்பது பிரித்தாளும் தந்திரமாக அமையும். அத்துடன் கிழக்கை முழுமையாக அபகரிப்பதற்கான சதியாகவும் அமையும்.

எனவே, இது சாத்தான் ஓதிய வேதம்  போன்றே அமையும். ஓரினத்தை ஏமாற்ற நினைத்த சிங்களத் தலைவர்கள் நாட்டையும் மக்களையும் மொத்தமாக ஏமாற்றியுள்ளனர். அதுவே யதார்த்தமாக உள்ளது” – என்றுள்ளது.