இலங்கையின் நெருக்கடிக்குத் தீர்வுகாண இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம்!

0
58
Article Top Ad

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

இந்தத் தீர்வு அடுத்த 25 வருடங்களைக் கருத்தில்கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கும் அப்பால் சென்று இளைஞர்களின் எதிர்காலத்துக்காக நாட்டைத் தயார்படுத்தத் தான் தீர்மானித்திருக்கின்றார் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இளைஞர் சந்ததியினருக்கு உதவும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில், டிஜிட்டல் அபிவிருத்தியுடன் கூடிய எதிர்காலத்துக்கு ஏற்ற தீர்வுகள் குறித்தே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்குத் தீர்வு காணும் முகமாக மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர்களை நியமிப்பதற்கு அவசியமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாவட்டம் 306 சி2, இன் லியோ ஆட்சேர்ப்பு மற்றும் லியோ தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (11) முற்பகல் கொழும்பு ரோயல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடு முழுவதுமிருந்து 6 ஆயிரத்து 500 புதிய லியோக்கள் சங்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்,

“2023 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுடன் இணைந்ததாக இளைஞர்களுக்கான தேசிய அடித்தளமொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. நாட்டைக் கட்டியெழுப்ப இளைஞர்களை அதில் இணைந்துகொள்ள வேண்டும்.

உலகளாவிய நெருக்கடியான காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்தைக் கருத்தில்கொண்டு, அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அர்த்தமுள்ள செயற்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும்” – என்றார்.

இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் லியோ இந்துனில் உதார பளிஹவதன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் நினைவுச் சின்னங்களைப் பரிசளித்தார். மேலும் லியோ உறுப்பினர்களுக்கான விருதுகளையும் ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார்.

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, கொழும்பு ரோயல் கல்லூரி அதிபர் எம்.வி.எஸ் குணதிலக்க, முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் லசந்த குணவர்தன, மாவட்ட ஆளுநர் லயன் பெனட் கமலத் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவத் தலைவன் லியோ கவீஷ ரத்நாயக்க ஆகியோரும் இந்த நிகழ்விலல் கலந்துகொண்டனர்.