கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

0
70
Article Top Ad

கொழும்பு புறநகர் பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மொஹமட் பருஷான்  (வயது 48) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

அவர் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 10.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் ஹோட்டலின் கதவைத் தட்டி முதலில் சிகரெட் கேட்டுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மற்றைய நபர் திடீரென கதவைத் திறந்து ஹோட்டலுக்குள்  நுழைந்து உரிமையாளரின் மார்பில் நான்கு தடவைகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் அங்கிருந்த சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஹோட்டலின் உரிமையாளர் பாதுக்க வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.