கூட்டமைப்பும் கூட்டணியும் இரட்டைக் குழல் துப்பாக்கி – மனோ அதிரடிக் கருத்து

0
97
Article Top Ad

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி, இரட்டைக் குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

அரசமைப்பு பேரவை நியமனங்களில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே மனோ கணேசன் எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பு பேரவையில் நியமிக்கப்படவுள்ள ஏழு எம்.பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்.பிக்களும்,  ஒரு முஸ்லிம் எம்.பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்.பியாக ஒரு தமிழ் எம்.பி. இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பு.

ஆனால், இதையும்கூட தட்டிப் பறிக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் ‘உத்தர சபை’ கட்சி முயல்கின்றது. அந்த நியமனம் உதய கம்மன்பில எம்.பிக்கு வழங்க வேண்டும் என அந்தக் கட்சி பிடிவாதம் பிடிக்கின்றது.

இது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம். திருத்த முடியாத திமிர்வாதம். இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி, இரட்டைக் குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும்.

அரசமைப்பு பேரவையில் சட்டப்படி பத்து உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். அதில் ஏழு எம்.பிக்களும், மூன்று சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் இடம் பெற வேண்டும்.

இந்த 7 எம்.பிக்களில், நான்கு சிங்கள எம்.பிக்களும், தலா ஒரு எம்.பியாக மூன்று எம்.பிக்கள், வடக்கு – கிழக்கு தமிழர், முஸ்லிம்கள், இலங்கை இந்திய தமிழர் ஆகியோரைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இதுவே நியாயமான நடவடிக்கை. ஆனால், இது நடைபெறவில்லை.

சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரும் தம் பதவி நிலை காரணமாக அரசமைப்பு பேரவையில் இடம்பெறுகின்றார்கள். ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் தம் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். இதன்படி ரணில் விக்கிரமசிங்க, தமது பிரதிநிதியாக எம்.பி. நிமல் சிறிபால சில்வாவையும்,  சஜித் பிரேமதாஸ தமது பிரதிநிதியாக எம்.பி. கபீர் ஹாசீமையும் நியமித்துள்ளனர்.

அரசு, பிரதான எதிர்க்கட்சி ஆகிய கட்சிகளைச் சாராத சிறுகட்சிகளின் பிரதிநிதியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். அதன்படி, எம்.பி. சித்தார்த்தனின் பெயரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரித்துள்ளது. இப்போது இதுவே பிரச்சினையாக மாறியுள்ளது.

‘மொட்டு’ கூட்டணியில் தெரிவாகி விட்டு, அரசின் எல்லாத் தவறுகளுக்கும் காரணமாகி விட்டு, இப்போது எதிர்க்கட்சி பக்கத்தில் வந்து உட்கார்ந்துள்ள உதய கம்மன்பில, விமல் வீரவன்ச கும்பல், இதையும் தட்டிப் பறிக்கப் பார்க்கின்றது.

உண்மையில், இந்த விவகாரத்தில் மலையக இந்திய வம்சாவளி தமிழரே முதலில், அநீதிக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம், அவர்கள் நியமிக்கும் எம்.பியாக இந்திய வம்சாவளி தமிழரைப் பிரதிநித்துவம் செய்யும் ஒரு எம்.பியை நியமிக்கும்படி, நானும், எம்.பி. பழனி திகாம்பரமும் கோரிக்கை விடுத்தோம்.

தான் ஏற்கனவே, எம்.பி. நிமல் சிறிபால சில்வாவைப் பெயரிட்டு விட்டதாகவும், முதலிலேயே கூறி இருந்தால், பரிசீலிக்க இடமிருந்தது என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் கூறினார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பி. ஒருவரைத் தமது பிரதிநிதியாக நியமிக்க முதலில் எம்மிடம் உடன்பட, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிறகு தமது கட்சியில் இருந்து, எம்.பி. கபீர் ஹாசீமை நியமிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளது எனக் கூறினார். எம்.பி. கபீர் ஹாசீம் சகோதர முஸ்லிம் எம்.பி. என்பதால் அதை நாம் புரிந்துகொண்டோம்.

இந்நிலையில், மூன்று சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களில் ஒருவர், கட்டாயம் மலையக இந்திய வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அதற்கான பெயரையும் நாம், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் சிபாரிசு செய்து வழங்கியுள்ளோம்.

இத்தகைய பின்னணியில்,  இறுதியான ஒரேயொரு எம்.பி. நியமனத்தில், எம்.பி. சித்தார்த்தனின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிபாரிசு செய்துள்ளது. அது சட்டப்படியும், அரசியல் நியாயப்படியும் சரியானது. ஆகவே, அதை நாமும் ஆதரிக்கின்றோம். இதையே இன்று பிரச்சினைக்கு உள்ளாக்கி, அதையும் தட்டிப்பறித்து, ஈழத்தமிழ், மலையக தமிழ் என்ற பேதமில்லாமல் ஒரு தமிழ் எம்.பி. கூட அரசமைப்பு பேரவையில் இடம்பெற முடியாத நிலைமையை இனவாதிகள் ஏற்படுத்த முயல்கின்றார்கள்” – என்றார்.