யாழ். மேயர் மணியின் ‘பட்ஜட்’ தோற்கடிப்பு – ஈ.பி.டி.பி. வெளிநடப்பு

0
110
Article Top Ad

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 7 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 11 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் பதிவாகின.

வாக்கெடுப்பின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) வெளிநடப்புச் செய்தது.

யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்டின் 2021 ஆம் ஆண்டுக்கான இரண்டு வரவு – செலவுத் திட்டங்களும்  தோற்கடிக்கப்பட்டமையால் புதிய மேயர் தெரிவு இடம்பெற்றது.

அதையடுத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பூரண ஆதரவுடன் யாழ். மாநகர மேயராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, மேயர் மணிவண்ணனின் 2023 வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வெளிநடப்புச் செய்தமையால் அது தோற்கடிக்கப்பட்டது.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ். மாநகர சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் 16 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஓர் உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.