தெற்காசியாவில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தினால் இலங்கைக்கு மிக்பபெரிய பாதிப்பு

0
56
Article Top Ad

விவசாயப் பொருட்கள் மற்றும் தானியங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், உலகில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்துடன் கூடிய முதல் பத்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.

உலக வங்கியினால் வெளியிடப்பட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பான அண்மைய புதுப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைய தெற்காசியாவில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது.

டிசம்பர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய 2022 நவம்பர் மாதத்திற்குள் இலங்கையின் வருடாந்த பெயரளவிலான உணவுப் பணவீக்கம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்
74%ஐ எட்டியுள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த நிலைமையை சமாளிக்க  முடியாத நிலையில் உள்ளனர்.

அதிகரித்த காலநிலை மாற்ற அதிர்ச்சிகள், வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவு மற்றும் உள்ளூர் நாணயங்களின் மதிப்பிழப்பு காரணமாக, பொதுவாக தெற்காசியாவில் உணவு விலைகள் இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக உள்ளதோடு, தெற்காசியாவிலும் ஆரோக்கியமான உணவுக்கான அணுகல் பொதுவாக குறைந்துள்ளதாக உலக வங்கி அறிக்கை காட்டுகிறது.

மோசமான பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள இலங்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022 நவம்பரில் உணவுக்கான நுகர்வுப் பொருட்களின் பணவீக்கம் 73.7 சதவீதமாக உள்ளதோடு, நெருக்கடிகளை சந்தித்துள்ள ஏனைய தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானில் நுகர்வோர் பொருட்களின் பணவீக்கம் 31.2 சதவீதமாகவும், பங்களாதேஷில் 8.1 சதவீதமாகவும், நேபாளத்தில் 8.1 சதவீதமாகவும் அமைந்துள்ளது.

இலங்கையில் காணப்படும் உரத் தட்டுப்பாடு, உரங்களின் விலை அதிகரிப்பு, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் மழையின்மை போன்ற காரணங்களால் எதிர்வரும் பருவத்தில் விளைச்சல் 50 வீதம் குறையும் அபாயம் உள்ளதாக அறிக்கை கணித்துள்ளது.

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களால் இறக்குமதி செய்யப்பட்ட தானியங்களின் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை (2.2 மில்லியன்  தொன்களில் 1.27 மில்லியன் தொன்கள்) மற்றும் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் பண்ணை மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான தேவையான பொருட்களில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் டிசம்பர் 2021 முதல் நவம்பர் 2022 வரையிலான உணவுப் பணவீக்கம் (சதவீத மாற்றம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது) கீழே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், உலக வங்கி குழு மற்றும் G7 ஆகியவை பட்டினியின் உலகளாவிய நெருக்கடிக்கு உடனடி மற்றும் கூட்டுப் பதிலை வழங்கும் நோக்கத்துடன் ‘உணவுப் பாதுகாப்பிற்கான உலகளாவிய கூட்டணி’ கூட்டப்பட்டதோடு, இது பொதுவில் அணுகக்கூடிய உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியது.

இதற்கமைய டிசம்பர் 2022 இல், இலங்கையில் போதுமான உணவு நுகர்வுக்கான சந்தர்ப்பம் இல்லாததோடு, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30.99 வீதமான மக்கள் போசாக்கற்ற மற்றும் குறைந்தளவு உணவுவை நுகர்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.