“சுகாதாரத் துறையில் ஆளனிப் பற்றாக்குறையும் ஏற்படும்” GMOA எச்சரிக்கை

0
41
Article Top Ad

இலங்கை எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறைக்கு மேலதிகமாக மனித வளப் பற்றாக்குறையும் நாட்டின் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை மோசமாகப் பாதிக்கும் என வைத்தியர்களின் பிரதான தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

“மருந்து மாத்திரமல்ல, அதில் மனித வளம் மற்றும் ஆரோக்கியம்  குறித்த பிரச்சினையும் உள்ளது. வைத்திர்கள் மாத்திரமன்றி சுகாதாரத்துறையில் உள்ள பலரும் இதை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ”

கடந்த கொவிட் தொற்றின் போது எதிர்கொண்டது போன்ற உயர் தொற்றுநோய் நிலைமை மீண்டும் இந்த நாட்டில் ஏற்பட்டால் அதனை நிர்வகிப்பது இலகுவானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் ஷமல் விஜேசிங்க தெரிவிக்கின்றார்.

அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றிய பெருமளவிலான வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறி வருவதாக கடந்த காலங்களில் ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டிருந்தன.

நாட்டில் தற்போது 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பற்றாக்குறைக்கு உடனடி தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கடந்த 30 ஆம் திகதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அடுத்த இரண்டு வாரங்களில் தட்டுப்பாடு 70 ஆக குறையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கை 383 ஆகவும், உயிர் காக்கும் மருந்துகளின் எண்ணிக்கை 14 ஆகவும் காணப்படுகின்றது.

இலங்கை எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறைக்கு ஒரே காரணம் பொருளாதார நெருக்கடியோ பணப் பற்றாக்குறையோ அல்ல, அதிகாரிகளின் திறமையின்மை, கொள்முதல் நடவடிக்கைகளில் உள்ள சிக்கல்கள், மோசடி, ஊழல் ஆகியனவே என வைத்தியர் ஷமல் விஜேசிங்க சுட்டிக்காட்டுகிறார்.

“நாட்டில் உள்ள மொத்தப் பணம், திறைசேரியில் உள்ள பணம் என அனைத்தையும் சுகாதார அமைச்சிடம் கொடுத்தாலும், வங்கிகளில் உள்ள மொத்த டொலர்களையும் சுகாதார அமைச்சுக்கு கொடுத்தாலும், மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாது.”

இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு, இரண்டு வார காலத்திற்குள் தீர்வுகளை வழங்குவது இலகுவானதல்ல என சுட்டிக்காட்டியுள்ள ஷமல் விஜேசிங்க, குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இப்பிரச்சினையின் நோக்கத்தை சுகாதார அமைச்சு சரியாக புரிந்து கொள்ளவில்லை என குற்றம் சுமத்திய வைத்தியர், சுகாதார அமைச்சு இன்னும் பிளாஸ்டர் தீர்வுகளை (தற்காலிக) வழங்கி செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடுகின்றார்.

நாட்டில் சுகாதார சேவையை பேணுவதற்கான அத்தியாவசிய மருந்துகளுக்கு இன்னும் பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதாக சுட்டிக்காட்டிய சுகாதார  நிபுணர்கள் சங்கம், “அத்தியாவசிய மருந்துகள் பட்டியல்” மாற்றப்பட்டு, ஏனைய அத்தியாவசியமற்ற மருந்துகளுக்கு முன்னுரிமை அளித்து, மருந்துப் பற்றாக்குறையை தீர்க்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிப்பதாக, சுட்டிக்காட்டியுள்ளது.

வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தினால் நடத்தப்படும் எழுபது அத்தியாவசிய பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆறு பெரிய வைத்தியசாலைகளில் சிடி (CT Scan) ஸ்கேன் இயந்திரங்கள் பல மாதங்களாக முற்றாகச் செயலிழந்துள்ளதாகவும் வைத்தியர் ஷமில் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

“தேசிய வைத்தியசாலையின் கெனீட்டர் ஆய்வுகூடம் மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக செயற்பாட்டை அளவிடும் இயந்திரம் ஆறு மாதங்களாகியும் இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கண்டி புற்றுநோய் பிரிவில் உள்ள லினியர் அக்சிலரேட்டர் இயந்திரங்கள் இரண்டும் செயற்படவில்லை”

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களுக்கு அடைய இவ்வருடம் இதுவரையில் 39,409 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் முழு இரத்தப் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரம் கடந்த ஐந்து வருடங்களாக பயன்படுத்தப்படவில்லை என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.