மேற்குலக நாடுகள் மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது!

0
60
Article Top Ad

மனித உரிமை விழுமியங்களை கடைப்பிடிக்க இலங்கைக்கு மேற்குலக நாடுகளும் ஐ.நாவும் அழுத்தம் கொடுப்பது போன்று சுவீடனில் புனித குர்ஆன் எரிப்பு சம்பவத்தை கருத்துச் சுதந்திரமாக கருதாது மதச் சுதந்திரத்தை மீறுவதாக பார்க்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நேற்றுமுன்தினம் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”மதத்தைப் பின்பற்றும் உரிமை தொடர்பான முழு கருத்தியலும் தற்போது சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் சல்வான் மோமிகா (Salwan Momika) என்பவர் சுவீடனில் உள்ள துருக்கி தூதரகம் முன் குர்ஆனை எரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடினார். பொலிஸார் அதற்கு அனுமதி மறுத்தாலும் அது, கருத்து தெரிவிக்கும் உரிமை என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

மதச் சுதந்திரத்தின் அடிப்படையிலே பொலிஸார் செயல்பட்டார்கள். அது கருத்து தெரிவிக்கும் உரிமை என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது.

புனித குர்ஆன் எரிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுவீடனுக்கு அனைத்து நாடுகளாலும் அழுத்தம் விடுக்கப்பட்டது.

அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். இஸ்ரேல் கூட இதை செய்யப்படக்கூடாத ஒன்று என்று கூறியது. இது ஏபிரகாமின் கடவுள் பற்றிய புனித நூல் என்றும், இதை அவமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

புனித குர்ஆனை எரிப்பது அருவருக்கத்தக்க மற்றும் அவமரியாதைக்குரிய மற்றும் தூண்டிவிடும் செயல் என்றும் சுவீடன் தெரிவித்துள்ளது.

ஆனால், கருத்துச் சுதந்திரம், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை ஆகியவை அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைய பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.

இந்த பதிலைத் தொடர்ந்து ஒரு சில மேற்கத்தேய அரசாங்கங்கள் இது கருத்துச் சுதந்திரம் என்று கூறின. அவ்வாறு இதனை கருத்துச் சுதந்திரத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் தற்போது ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்றுள்ளது.

இது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளதோடு 13 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனீவாவில் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.

இப்போது எழும் கேள்வி இதுதான். இது மதச் சுதந்திரத்தை மீறுவதாக நாம் அனைவரும் கருதுகிறோம். ஆனால் இதை கருத்து சுதந்திரத்தின் கீழ் கொண்டுவர முயற்சி நடக்கிறது.

எல்லாவற்றையும் கருத்துச் சுதந்திரத்தின் கீழ் கொண்டு வர முடியாது. அதற்கு ஒரு வரையறை இருக்க வேண்டும்.

இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அது மேற்குலக நாடுகளுக்கு பின்னடைவாக அமையும் என சில அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன.

இது மேற்கு அல்லது கிழக்கு அல்லது வடக்கு அல்லது தெற்கு பிரச்சினை அல்ல. இது மதத்தைப் பின்பற்றும் உரிமை பற்றிய கேள்வியாகும்.

நான் முஹம்மது நபியைப் பின்பற்றுபவன் அல்ல. ஆனால் திருக்குர்ஆன் மிகவும் மதிப்புமிக்க நூல் என்று நான் நினைக்கிறேன்.

பகவத் கீதை மற்றும் பைபிளையும் நாம் அதேபோன்று பயன்படுத்தலாம். இதேபோன்று, தம்ம பதத்திலும் அல்லது திரிபிடகத்திலும் பயனுள்ள விடயங்களைக் கண்டறியும் பௌத்தர் அல்லாதவர்களும் இருக்கின்றனர்.

எனவே நாம் அனைவரும் இதை மதத்தின் மீதான தாக்குதலாகக் கருதுகிறோம். ஆனால் ஒரு சில மேற்கத்தேய நாடுகளின் கருத்துப்படி இது ஒரு கருத்துச் சுதந்திரமாகும்.

ஏனென்றால், அவர்கள் குழப்பத்தை மறைக்க கருத்துத் தெரிவிக்கும் எண்ணக்கருவை விரிவுபடுத்த முயற்சிக்கிறார்கள்.

அதனால் மேற்கத்தேய விழுமியங்களை பரப்புவதற்காக கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதே அவர்களது நிலைப்பாடாக உள்ளது.

அதேபோல் அந்த விழுமியங்களை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனநாயகத்தை மதிப்பவர்கள்.

குறித்த விடயத்துடன் தொடர்புடையதாகவே மேற்படி விடயங்களை குறிப்பிடுகிறேன். இதன்போது இலங்கை தொடர்பில் நான் எதுவும் பேசப்போவதில்லை.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் இடையில் கைசாத்திடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பிலான விடயங்களை நாம் நிறைவேற்றவில்லை என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

அதனால் எமது நிலைப்பாடு எதுவாக இருப்பினும் பொறுப்புகளை நிறைவேற்றிக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். அதனால் ஐக்கிய நாடுகள் சபை ஏன் அமைதி காக்கிறது என்பதே எமது கேள்வியாகும்.

அந்த சபையினால் இதுகுறித்த அறிக்கையொன்று வெளியிடப்படாமல் இருப்பதன் நோக்கம் என்ன? எதற்காக வாக்கெடுப்பொன்று வரும் வரையில் காத்திருக்க வேண்டும்? இது அனைவருக்கும் முக்கியமான விடயம் என்ற வகையில் நாம் எவ்வாறான விழுமியங்களை பின்பற்ற வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

எமது நீதிமன்றத்திற்கு அதிகாரம் மற்றும் இறைமை என்பன மக்களிடத்திலிருந்தே கிடைக்கின்றன. இருப்பினும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் மனித உரிமைகள் தொடர்பிலான பிரேரணையை பின்பற்ற வேண்டும்.

அவ்வாறாயின் நாம் எவ்வாறான விழுமியங்களை கடைப்பிடிக்க வேண்டும். நாம் தற்போது வரையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் அனைத்து நியதிகளையும் பின்பற்றியுள்ளோம்.

ஆனால் ஒரு பிரச்சினை உள்ளது. அனைத்து விடயங்களும் அவர்களுடைய நிலைப்பாட்டின் மீதே தங்கியுள்ளன.

உங்களுடைய கடைப்பிடித்தலுக்கான சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்த முடியாது. அதேபோல் அதற்கு வேறுவிதமாக அர்த்தம் கூறிக்கொண்டு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அதனை தடுக்கவும் முடியாது.

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியும் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியிருந்த நிலையிலேயே மனித உரிமைகள் பிரகடனம் கொண்டுவரப்பட்டது.

அவரின் உரையில் இரண்டாவது விடயமாக “ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான கடவுளை வணங்குவதற்கு சுதந்திரம் உள்ளது.” என்பதாகும்.

ஆனால் மனித உரிமை பிரகடனத்தில் மதம் – வழிபாடுகள் என்ற விடயங்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ரூஸ்வேல்டின் கூற்றுப்படி, ஒருவருடைய பின்பற்றும் உரிமையை முழுமையாக மறுக்கப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது கருத்துச் சுதந்திரமாக பார்க்கப்படும் எனில் நாம் வரலாற்றை மீண்டு எழுத வேண்டிய நிலைமை உருவாகும். அனைத்து யூத புத்தங்களையும் வழிப்பாட்டுத் தலங்களையும் எரித்த ஹிட்லரை நோபல் பரிசுக்கு தகுதியானவராக அறிவிக்க நேரிடும். எனவே, மேற்படி இரு விடயங்களில் எதனை செய்ய வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.

அதனால் வியாழக்கிழமை என்ன நடக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அழுத்தங்கள் இன்றி அவர்கள் மேற்படி விடயத்தை கருத்துச் சுதந்திரம் என்று சுட்டிக்காட்டினால் தெற்கு மற்றும் மேற்கத்தேய செல்வந்த நாடுகளுக்கு மத்தியில் முரண்பாடுகள் உருவாகும்.

அதேபோல், மேற்படி விடயத்தை, பின்பற்றும் உரிமை என அவர்கள் சுட்டிக்காட்டினால் அதற்கான வரையறைகளையும் குறிப்பிட வேண்டும்.

இது கருத்துச் சுதந்திரம் என்பதை போல மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்பிலான பிரச்சினையுமாகும். இதன்போது எவ்வாறான விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

இது தொடர்பில் நாம் பொதுநலவாய நாடுகளுடன் பேச வேண்டுமா என எமது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடத்திலும் வினவினேன்.

அதனையடுத்து நீதி அமைச்சருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் முன்பாக பொதுநலவாய சபையின் செயலாளருடன் கலந்துரையாடுமாறு கூறினேன்.

பொதுநலவாய சபை, மனித உரிமைகள் தொடர்பிலான பெரும் பங்கை ஆற்றும் என நம்புகிறேன். இதனை தனியொரு தரப்பிற்கு மாத்திரம் வழங்கினால் அது அரசியல் மயமாகிவிடும். இது சகல மக்களினதும் உரிமையாக வேண்டும். இது பெரும் சவாலாகும்.

எனவே மனித உரிமைகள் பேரவை மக்களின் கடைப்பிடிக்கும் உரிமைகளை வரையறுக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டும். இது ஒரு ஆரம்பம் மாத்திரமே.

எவ்வாறாயினும் தெற்கிலுள்ள நாடுகளின் தனித்துவமான பெறுமதிகள், தெற்கிலுள்ள நாடுகளின் விழுமியங்கள் மற்றும் உரிமைகளுக்கு மனித உரிமைகள் பேரவை மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும்.

அதனைத் தடுப்பதற்கு அவசியமான அனைத்து முயற்சிகளையும் புறக்கணிக்குமாறு நான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அங்கத்தவர் என்ற வகையில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

“அனைத்து மதத் தலைவர்களையும் கௌரவமாக நடத்துங்கள்” என புத்த பெருமான் கூறியுள்ளார். பொதுநலவாயச் சபையிலும் குறித்த விடயத்தினை ஆராய இருக்கிறோம்’’ – என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.