கிலியன் எம்பாப்பே அடுத்து எந்தக் கழகத்திற்காக விளையாடுவார்?

0
108
Article Top Ad

பிரான்ஸ் தேசிய கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பே Kylian Mbappe கடந்த சில வருடங்களாக கழக மட்டத்தில் அந்நாட்டின் முன்னணி கழகமான பிஎஸ்ஜி PSG கழகத்திற்காக விளையாடிவந்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக அவரது கழக எதிர்காலம் தொடர்பான கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன.

தற்போது பிரான்ஸ் உள்ளூர் கழக கால்பந்தாட்ட பருவகாலம் ஆரம்பிக்க முன்னதாக பிஎஸ்ஜி அணி ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அந்த அணியில் கிலியன் எம்பாப்பே உள்வாங்கப்படவில்லை.

அடுத்தாண்டில் நிறைவடையவுள்ள அந்தக் கழகத்துடனான ஒப்பந்த காலத்தை நீடிப்பதற்கு கிலியன் மறுத்துவந்த நிலையிலேயே ஆசியாவின் ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளுக்கான பிஎஸ்ஜியின் சுற்றுப்பயணத்துக்கான அணியில் சேர்க்கப்படவில்லை எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிஎஸ்ஜி கழகத்துடனான ஒப்பந்த காலம் 2024ல் நிறைவடையும் வரை அந்தக்கழகத்துடன் இருப்பதற்கு கிலியன் எதிர்பார்த்துள்ளபோதும் அப்படி விட்டுவிடமுடியாது என கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிலியன் விருப்பின் படி நடந்தால் எவ்வித கட்டணமும் இன்றி அவர் வெளியேறுவார் அவரை அப்படி விட்டுவிடமுடியாது என கழக நிர்வாகம் கூறியுள்ளது. இந்த நிலையில் கிலியனை பரிமாற்றம் செய்வதற்காக எனைய கழகங்களுடன் கட்டணத் தொகை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக நம்பப்படுகின்றது.

பிஎஸ்ஜியுடனான பருவகால நிறைவின் பின்னர் கிலியன் தனது சிறுபிராய கனவு அணியான ரியால் மட்ரிட்டுடன் இணைந்துகொள்வார் எனப் பரவலாக நம்பப்படுகின்றது.

2017ம் ஆண்டில் ஏ எஸ் மொனாக்கோ கழகத்திலிருந்து பிஎஸ்ஜி கழகத்துக்கு கிலியன் 215 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டபோது கால்பந்தாட்ட உலக வரலாற்றில் அதிக விலைக்கு கொள்வனவுசெய்யப்பட்ட இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.

இதுவரையில் பிஎஸ்ஜி கழகத்திற்காக 260 போட்டிகளில் விளையாடியுள்ள கிலியன் 212 கோல்களைப் போட்டிருந்தார். இதுவே அக்கழகத்திற்காக வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச கோல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.