83 கறுப்பு ஜூலையில் நாட்டை எரிக்க முன் 81ல் ஒரு இலட்சம் நூல்களுடன் யாழ் நூலகத்தை எரித்தார்கள்!

0
42
Article Top Ad
1958, 1977, 1983 என வரிசையாக எங்களை உயிருடனும், எம் வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் எரித்தார்கள். உலகமே திட்டி தீர்க்கும் இட்லரே, 2ம் உலக யுத்தத்தின் போது லண்டன் நூலகத்தின் மீது குண்டு வீச வேண்டாம் என்று ஆணையிட்டாராம். ஆனால், இங்கே இனவாத அரசியலர் 1981ல் ஒரு இலட்சம் நூல்களை கொண்ட யாழ் நூலகத்தையே எரித்து தமிழரின் அறிவு பெட்டகத்தையே எரித்தார்கள். இதையும் தாண்டிதான் இன்னமும் தமிழர்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற “நோ மோர் ப்ளக் ஜூலை” என்ற சீர்திருத்தங்களுக்கான மக்கள் இயக்க கலந்துரையாடலில் சிங்கள மொழியில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
தற்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க, மத்திய வங்கி குண்டு வழக்கின் கைதிகளை பொது மன்னிப்பில் விடுவித்துள்ளார். அதுபற்றி அறிவிக்கும் சிங்கள ஊடகங்கள் மத்திய வங்கி குண்டு வெடிப்பின் போது ஏற்பட்ட அழிவுகளை காணொளியாக தொலைகாட்சி செய்திகளில் நினைவுறுத்தி காட்ட கண்டேன்.
இது உலகை உலுக்கிய கறுப்பு ஜூலை கலவரம் நடந்த நாட்கள். இதுபற்றியும் நினைவுறுத்தி, கறுப்பு ஜூலை கலவர எரிப்பு, அழிவு காட்சிகளை தேசிய ஊடகங்கள் காட்டவில்லை. ஏனெனில் கொழும்பு ஹவ்லக் நகரில் எங்கள் வீடு கொள்ளையடிக்கப்பட்டு எரியூட்டப்பட்டது. எங்கள் பல வாகனகங்கள் எரியூட்டப்பட்டன. புறக்கோட்டையில் எங்கள் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையடிக்கபட்டது. ஏலம் எங்கள் தந்தை உழைத்து சம்பாதித்த சொத்துகள். எவரையம் ஏமாற்றி கொள்ளை அடிக்கப்பட்டவை அல்ல.
அவற்றையும் செய்திகளில் காட்ட வேண்டும் என நான் விரும்பவில்லை. எனக்கு பார்க்க விருப்பம் இல்லை. நினைக்கவும் விருப்பம் இல்லை. நான் வன்முறையை வெறுக்கிறேன். ஆனால் ஏன் இரட்டை கொள்கைகள் என கேட்கிறேன். ஒரு நாடு ஒரு கொள்கை என்கிறீர்கள். அப்புறம் ஏன் செய்தி அறிவிப்பில் கூட இரட்டை கொள்கை?
1958, 1977, 1981 யாழ் நூலக எரிப்பு, 1983… இவை எது தொடர்பில் குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை. தண்டனை வழங்கப்படவும் இல்லை. இவை அனைத்துக்கும் காரணம் இவர்கள் சிங்களவர்கள். நாம் தமிழர். இது சிங்கள நாடு. பெளத்த நாடு. நாம் தமிழர்கள். இந்த சிந்தனை மாறனும். முதலில் குற்றம், தவறுகள் ஏற்கப்பட வேண்டும். அதுதான் பொறுப்பு கூறல். ஆனால், எதுவும் இல்லை.
இப்படி பொறுப்பு கூறல் நாற, மறுபுறம் அரசியல் தீர்வு நாறுகிறது. 13 மைனஸ், ப்ளஸ் என்று நாறுகிறது. வழமையாக அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு ஏதோ தீர்வை தரும் போது எப்போதும் எதிர்க்கும் வழமையான எதிர்க்கட்சி அரசியல் இனி இல்லை என்ற உத்தரவாதம் மட்டுமே என்னால் தர முடிகிறது. 1983 முடிந்து இந்த 40 வருடங்களில் இவ்வளவு தூரம்தான் நாம் வந்துள்ளோம்