13ஆம் திருத்தம் நாட்டுக்கு அவசியம்! விரைவில் மாகாண சபைத் தேர்தல்! – நாடாளுமன்றில் ரணில் அறிவிப்பு

0
58
Article Top Ad


நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார்.

இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இன்று நாடா ளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-

“13 ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை நாங்கள் பார்க்க வேண்டும். ஏனைய நாடுகளின் அதிகாரப் பகிர்வை நாங்கள் ஆராய வேண்டும். வருடாந்தம் மாகாண சபைகளுக்கு 500 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. அதனால் நன்மைகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆனாலும் 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைப் புறந்தள்ள முடியாது. எனவே அது தொடர்பான எனது யோசனைகளை நான் முன்வைத்துள்ளேன். நாடாளுமன்றம் அதனை ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்.

மாகாண சபைகள் ஊடாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். எனவே அரசமைப்பதைத் திருத்தம் செய்து மக்களுக்கு ஏற்ற வகையில் தீர்மானமொன்றை எடுத்தல் அவசியம். மாகாண சபை முறைமையை அரசமைப்பிலிருந்து நீக்கிவிடக் கூடாதென்பது ஏகமானதான கருத்தாக இருக்கின்றது. இது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் பொதுவானது.

மக்களுக்குத் தேவைப்படும் வகையில் இதனை மாற்றியமைக்க வேண்டியதாக இருக்கின்றது. மாகாண சபை சட்டத்திலும் திருத்தங்களைச் செய்ய வேண்டும். மாகாண சபைத் தேர்தலை இதன் பின்னர் நடத்த வேண்டும்.

இதர அதிகாரங்கள் குறித்து முதலில் பேசி பின்னர் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து பேசுவோம். இலகுவான விடயங்களை முதலில் ஆராய்ந்து பின்னர் கடினமான விடயங்களை ஆராய்வோம். உலகளாவிய ஆதரவுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதன் மூலம், தேசம் தனது அடையாளத்தைப் பாதுகாக்கவும், ஒற்றுமையை மேம்படுத்தவும், அதிக அதிகாரங்களைப் பரவலாக்கவும் முடியும். எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் எதிர்ப்பது என்ற பாரம்பரிய நடைமுறையில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகிச் செல்ல வேண்டும்.” – என்றார்.
……………..