இலங்கைக்கு கடல்சார் கண்காணிப்பு விமானத்தை வழங்கியது இந்தியா

0
40
Article Top Ad

77ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், இந்தியா இன்று (ஆகஸ்ட் 16) தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிடம், Dornier-228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானத்தை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கைக்கு கையளிக்கப்பட்ட டோர்னியர்-228 விமானம் வருடாந்த பராமரிப்புக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட நிலையில், அதற்காக மாற்று கண்காணிப்பு விமானமே இவ்வாறு இந்தியாவால் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9, 2018 அன்று புதுடெல்லியில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்பு பாதுகாப்பு கலந்துரையாடலின் போது, இந்தியாவில் இருந்து டோர்னியர் ரகத்திற்கு இணையான கடல்சார் கண்காணிப்பு விமானங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதுடன், கடல்சார் கண்காணிப்பில் இலங்கையின் திறன்களை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய அரசாங்கம் இந்த ஆலோசனைகளின் போது செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்தது. இந்திய கடற்படையின் ஒரு பகுதியாக இருந்த டோர்னியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக இலங்கைக்கு வழங்க முடிவு செய்தது.

இதன் பிரகாரம் இந்த விமானத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கட்டுநாயக்காவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இடம்பெற்றது.

இதேவேளை, முன்னதாக வழங்கப்பட்ட Dornier-228 விமானமானது கடந்த வருடத்தில் இலங்கைக்குள் விசேட பணிகளைச் செய்வதில் முக்கியப் பங்காற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Dornier-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கடல் மற்றும் கடலோர கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் வான்வெளி மற்றும் பிரத்தியேக பொருளாதார வலயத்தை கண்காணித்தல் மற்றும் பாதுகாத்தல், தேடல் மற்றும் மீட்பு பணிகளை நிறைவேற்றுதல் மற்றும் கண்காணிப்பு மற்றும் பல நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. கடல் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கும் இது உதவியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.