உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு; நெருக்கடியை சந்திக்கப்போகும் இலங்கை

0
67
Article Top Ad

உலக சந்தையில் பாரிய அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வடைந்து வருகிறது. இது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்துமென பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையில் காஸாவில் நடந்துவரும் போர் காரணமாகவே கச்சா எண்ணெய் விலையில் தொடர்ச்சியான அதிகரிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஐரோப்பிய ஒன்றியம்

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இன்று 90 அமெரிக்க டொலர்களாக பதிலாகியுள்ளது.

WTI CRUDE – 84.08

BRENT CRUDE – 89.10

MURBAN CRUDE – 90.51

என்ற அடிப்படையில் பிரதான மூன்று கச்சா எண்ணெய்களின் விலைகளும் பதிவாகியுள்ளன.

இந்த போர் மத்திய கிழக்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் விரைவில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இதுதொடர்பில் விவாதிக்க ஐரோப்பிய ஒன்றியம் அவசர கூட்டமொன்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

குளிர்காலத்தில் நெருக்கடியை சந்திக்கப் போகும் ஐரோப்பா
எதிர்வரும் குளிர்காலத்தில் ஐரோப்பா பாரிய நெருக்கடியை சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு மற்றும் டீசல் என்பன குளிர்காலத்தில் ஐரோப்பாவுக்கு அத்தியாவசியமானவையாக உள்ளன.

ஆனால், உக்ரைன் – ரஷ்ய போர் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போரால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பாரிய அளவில் உயர்வடைந்துள்ளன. அதேபோன்று இயற்கை எரிவாயுவின் விலையும் அதிகரித்துள்ளது.

விலைகள் ஒருபுறம் அதிகரித்துவரும் சூழலில் டீசல், பெற்றோல் உற்பத்திகளும் பாதிப்படையும் நிலை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வராவிடின் மத்திய கிழக்கில் டீசல் உற்பத்தி பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் போரில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுடன் இருப்பதால் ஐரோப்பாவுக்கான இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகத்தை ரஷ்யா இடைநிறுத்தியுள்ளது.

ரஷ்ய எரிபொருள் விநியோகம் குறைவாக இருப்பதால், ஐரோப்பா இப்போது மத்திய கிழக்கின் டீசலை நம்பியே உள்ளது. இதனால் உடனடியாக போரை முடிவுக்கு கொண்டுவர ஐரோப்பிய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

இலங்கையில் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடி

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் விரைவாக மேற்கொள்ளப்பட உள்ள எரிபொருள் விலை திருத்தத்தில் குறிப்பிடத்தக்களவு பெற்றோல், டீசல் விலைகள் அதிகரிக்கப்படுமென அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, போக்குவரத்து கட்டணங்கள் உயர்வால் கடுமையான நெருக்கடியை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். எரிபொருள் விலைகள் அதிகரித்தால் பொருட்கள், சேவைகளுக்கான கட்டணமும் அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டிருந்தது. தற்போது ஓரளவு நெருக்கடி குறைந்துள்ள சூழலில் இஸ்ரேல் – ஹமாஸ் போரால் மீண்டும் பொருட்களின் விலைகள் உயர்வடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போராட்டங்கள் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.