விஜயகாந்த் செய்த இரண்டு பேருதவி – அஞ்சலி செலுத்திய பிறகு நா தழுதழுக்க பேசிய ரஜினி

0
36
Article Top Ad

விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அதனால் தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரை கொடுக்கக் கூட தயாராக இருந்தனர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை தீவுத் திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலிக்கு செலுத்திய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “கன்னியாகுமரி படப்பிடிப்பில் இருந்து இங்கே வருகிறேன்.

மனம் மிகவும் கனக்கிறது. விஜயகாந்த் பற்றி பேச எவ்வளவோ இருக்கிறது. நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த். ஒருமுறை பழகிவிட்டால், வாழ்க்கை முழுக்க அதனை மறக்கவே முடியாது. அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அதனால் தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரை கொடுக்கக் கூட தயாராக இருந்தனர்.

நண்பர்கள் மீது கோபப்படுவார். அரசியல்வாதிகள் மீது கோபப்படுவார். ஊடகங்கள் மீது கூட கோபப்படுவார். ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் வராது. காரணம் அவரது கோபத்தில் சுயநலம் இருக்காது. தைரியத்துக்கும் வீரத்துக்கு இலக்கணமானவர்.

எனக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். அப்போது ரசிகர்கள், பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது அங்கு என்னை பார்க்க வந்த விஜயகாந்த் ஒரு ஐந்து நிமிடத்தில் என்ன செய்தாரோ தெரியாது.

அத்தனை கூட்டத்தையும் கலைத்து விட்டார். அதுமட்டுமில்லாமல், ‘மருத்துவமனை பக்கத்திலேயே ஒரு ரூம் போடுங்கள், யார் வருகிறார்கள் என்று நான் பார்க்கிறேன்’ என்று சொன்னார். அதனை மறக்கவே முடியாது.

இன்னொரு சம்பவம், மலேசியா, சிங்கப்பூர் நட்சத்திர கலைவிழாவை முடித்துவிட்டு வரும்போது எல்லாரும் கிளம்பிவிட்டார்கள். நான் வருவதற்கு கொஞ்சம் நேரமாகிவிட்டது. அப்போது ரசிகர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். என்னால் அங்கிருந்து வெளியேறவே முடியவில்லை. இதனை பேருந்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த விஜயகாந்த், இறங்கிவந்து ஒரு இரண்டு நிமிடத்தில் பாதி கூட்டத்தை அங்கிருந்து அப்புறப் படுத்தினார்.

அப்படி உடல்பலம் கொண்ட ஒரு மனிதனை கடைசி நாட்களில் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. கேப்டன் அவருக்கு பொறுத்தமான பெயர். 71 பால்களில், நூற்றுக்கணக்கான சிக்சர்களை குவித்து, மக்களை மகிழ்வித்து விக்கெட்டை இழந்து இந்த உலகம் என்னும் ஃபீல்டை விட்டு போய்விட்டார். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் யார்? விஜயகாந்த் போன்றோர். வாழ்க விஜயகாந்த் நாமம்” இவ்வாறு ரஜினி நா தழுதழுக்க உருக்கமாக பேசினார்.