ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் அதிருப்தி

0
33
Article Top Ad

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 2ஆவது தோல்வியை நேற்றுமுன்தினம் சந்தித்தது.

விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஆனால், ஒரு கேப்டனாக அணியை ஹர்திக் பாண்டியா சரியாக வழிநடத்துகிறாரா? என்ற கேள்விதான் தற்போது மும்பை அணியின் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 36 பந்துகளில் வெற்றிக்கு 48 ஓட்டங்களே தேவையாக இருந்த நிலையில் அதைகூட மும்பை அணியால் எடுக்க முடியாமல் போனது.

பாண்டியா கையாண்ட விதத்தை புரிந்து கொள்ள முடியவில்லை

அந்த ஆட்டத்தில் துடுப்பாட்ட வரிசையில் ஹர்திக் பாண்டியா 7ஆவது வீரராக களமிறங்கியதும் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரீத் பும்ராவை, ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா கையாண்ட விதத்தை புரிந்து கொள்ள முடியாததாகவே இருக்கிறது.

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் மும்பை அணியின் பந்து வீச்சை மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசினர்.

ஆனால் அவர்களை கட்டுப்படுத்த ஹர்திக் பாண்டியா எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தியதாக தெரியவில்லை. முதல் 3 ஓவர்களில் ஹைதராபாத் அணி 40 ஓட்டங்களை விளாசிய நிலையில் 4ஆவது ஓவரை வீசிய பும்ரா 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

ஹர்திக் 120 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார்

ஆனால், அதன் பின்னர் பும்ராவை 12ஆவது ஓவர் வரை ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் பயன்படுத்தவில்லை.

உலக கிரிக்கெட் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பந்து வீச்சை கொண்டுள்ள பும்ராவை சரியான இடத்தில் ஹர்திக் பாண்டியா பயன்படுத்தத் தவறியது ஏன்? என்ற கேள்விகளை கிரிக்கெட் விமர்சகர்களும், வர்ணனையாளர்களும் கேட்கத் தவறவில்லை.

278 ஓட்ட இலக்கு துரத்தப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், நமன் திர் ஆகியோர் 200-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் அதிரடியாக விளையாடினார்கள்.

திலக் வர்மாவின் ஸ்டிரைக் ரேட் 188 ஆக இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியாவோ 120 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார். 10.5ஆவது ஓவரில் களமிறங்கிய அவர், அதிரடியாக விளையாட வேண்டிய கட்டத்தில் 20 பந்துகளை சந்தித்து 24 ஓட்டங்களை சேர்த்து வெளியேறினார்.

அவரது மந்தமான துடுப்பாட்ட இலக்கை துரத்துவதில் பெரிய அளவிலான தேக்க நிலையை உருவாக்கியது.

ஒருங்கிணைந்து செயல்பட்டதால் வெற்றிபெற முடியும்

முக்கியமாக புவனேஷ்வர் குமார் வீசிய 13-வது ஓவர்தான் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை உருவாக்கியது. இந்த ஓவரில் 5 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்டியா வெறும் 4 ஓட்டங்களே எடுத்தார்.

மும்பை அணியை தோல்வியின் பிடியில் சிக்கவைத்த முக்கியமான ஓவராக இது அமைந்தது. இதன் பின்னர் பாட் கம்மின்ஸ் வீசிய 15-வது ஓவரை ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் ஆகியோர் கூட்டாக வீணடித்தனர்.

கடந்த இரு சீசன்களிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டது போன்ற தோற்றம் இருந்தது.

ஆனால் அவரை, பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா திறம்பட வழிநடத்தி இருந்தார். ஷுப்மன் கில், ரித்திமான் சாஹா, சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல்டெவாட்டியா ஆகியோர் துடுப்பாட்டத்தில் பெரிய அளவில் பங்களிப்பை வழங்கினர்.

பந்து வீச்சில் மோஹித் சர்மா, முகமது ஷமி ஆணிவேராக திகழ்ந்தனர். இவர்களுடன் ரஷித் கான், நூர் முகமது பலம் சேர்த்தனர். ஒட்டுமொத்த அணியும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் வெற்றிகளை குவித்தது சாத்தியமானது.

களத்தில் இதுவரை நிகழ்ந்ததாகவே தெரியவில்லை

ஆனால் மும்பை அணியின் கலாச்சாரம் வித்தியாசமானது. ஒரு சகலதுறை வீரராக இதற்கு முன்னர் அந்த அணியுடன் ஹர்திக் பாண்டியா சிறப்பாகவே இருந்தார்.

ஆனால் தற்போது கூடுதலாக கேப்டன் பொறுப்பும் இணைந்துள்ளது. அதற்கு தகுந்தவாறு அவர், தன்னை தயார்படுத்திக் கொள்ள சிறிது காலம் ஆகக்கூடும்.

இது புறம் இருக்க அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மாவுடன் ஆலோசித்து செயல்பட்டாலே சிறந்த பலன்களை ஹர்திக் பாண்டியா அறுவடை செய்ய முடியும். ஆனால் அது களத்தில் இதுவரை நிகழ்ந்ததாகவே தெரியவில்லை என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.